அண்ணாசிகல தோட்ட மக்களின் கோயில் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

களுத்துறை மாவட்டத்தின் மதுக்கம தேர்தல் தொகுதிக்குட்பட்ட தமிழ் கிராமமே அண்ணாசிகல தோட்டமாகும். யட்டதொல எனும் பிரதேசத்தினை ஊடறுத்துச் செல்லும் மதுகம – தர்கா நகர் எனும் வீதியிலேயே இந்த கிராமம் அமையப் பெற்றுள்ளது.

வயல் காணிகள் மற்றும் இறப்பர் தோட்டங்களை சுற்றியுள்ள இந்த கிராமம் பிரதான வீதியிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் காணப்படுகின்றது. "ஒற்றையடி கிரவல் பாதையினைக் கொண்ட இந்த கிராம மக்களின் பிரதான ஜீவனோபாயம் மீன்பிடித் தொழிலாகும்" என திருமதி மோகனம்பால் தெரிவித்தார்.

எனினும், இக்கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுடனேயே இங்கு வாழ்ந்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக இந்த தோட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, "சுமார் 100 வருடங்களுக்கு மேல் இந்த தோட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை" என ஏ. ஞானசேகர் குற்றஞ்சாட்டினார்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலப் பகுதியில் மாத்திரமே இங்கு வருவதாகவும், பின்னர் இந்த தோட்டத்தினை மறந்திடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கிராம மக்களின் நீண்ட கால தேவையாக நிரந்தர கோயில் காணப்படுகின்றனது. எனினும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இதன் நிர்மாணிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இன்று வரை நிறைவு செய்யப்படவில்லை.

"இதனால், தைப்பொங்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை தினங்கள் சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், பௌர்ணமி தினங்களில் திருவிழாக்களை ஏற்பாடு செய்யவும் கஷ்டமாக உள்ளது" என ஜீ. மதுசான் தெரிவித்தார்.

எமது தோட்டத்தின் முதல் பிரச்சினையாக இது தான் காணப்படுகின்றது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட யாராவது எங்கள் தோட்டத்திற்கு வந்தாலும் இந்த கோயில் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத் தருமாறே கோரிக்கை விடுப்போம்' என அவர் கூறினார்

"இந்த கோயிலின் நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவு செய்யப்படாமையில் வழிபடுவதற்கு ஒழுங்கான இடமொன்றில்லை என மதுசான் மேலும் குறிப்பிட்டார்.

இதனால் தற்காலிகமாக சிறிய இடமொன்றிலேயே சமய வழிபாடுகளை இத்தோட்ட மக்கள் மேற்கொள்கின்றனர். இவர்களின் இந்த நீண்ட நாள் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்.