தேர்தல் விதிமீறல்கள் குறைந்துள்ளதை TISL வரவேற்கிறது; ஜனநாயக விழுமியங்களைப் பேணுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகிறது
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகளின்படி, தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்ட மீறல்களில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) அவதானிக்கிறது.
இது தேர்தல்களை நடத்துவதில் ஒரு சாதகமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு, இலங்கையில் ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்துவதில் அரசியல் பங்குதாரர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது.
பொதுவான முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவை பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. பொருட்களை விநியோகிப்பதன் மூலம் வாக்குகளை விலைக்கு வாங்குதல், தாக்குதல்கள் மற்றும் சொத்து சேதம் உள்ளிட்ட வன்முறைகள், மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக பொது சொத்துக்களைப் பயன்படுத்துதல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த தேசிய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இத்தகைய மீறல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், அவை தொடரும் நிலை ஜனநாயகத்தின் நேர்மையைத் தளர்த்துவதோடு, தேர்தல் செயல்முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சிதைக்கிறது.
ஆளும் கட்சி பிரதிநிதிகளை அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கும் உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி வெளியிடும் சர்ச்சைக்குரிய பொது அறிக்கைகள் கவலையை அதிகரிக்கின்றன.
இத்தகைய கருத்துக்கள், வாக்காளர் சுதந்திரத்தின் மீது முறையற்ற செல்வாக்கு செலுத்தப்படுவதற்கான தீவிர கவலைகளை எழுப்புகின்றன. மேலும், செயல்படும் ஜனநாயகத்திற்கு அவசியமான சமத்துவம், பாரபட்சமின்மை, பொறுப்பான தலைமைத்துவம் ஆகிய கொள்கைகள் கவலைக்குரிய வகையில் புறக்கணிக்கப்படுவதையும் இது வெளிப்படுத்துகிறது.
இந்த அணுகுமுறை, தகுதியை விட கட்சி விசுவாசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் பொது வளங்கள் பேரம் பேசும் பொருட்களாகக் கருதப்படும் நிலைக்கும் இது வழிவகுக்கிறது. குறிப்பாக, மிக உயர்ந்த நேர்மை தேவைப்படும் தேர்தல் காலங்களில், உயர் மட்டத் தலைமைத்துவம் நல்லாட்சிக்கான தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
நாடு தேர்தல் காலத்தின் இறுதி இரண்டு வாரங்களை நெருங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், இந்த முன்னேற்றத்தைப் பாதுகாப்பதும், தேர்தல் செயல்முறையில் ஏற்படும் எந்த விதிமீறல்களையும் உடனடியாகவும் திறம்படவும் கையாள்வதும் மிக முக்கியமாகிறது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்வதற்கும், தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் தவிர்ப்பதற்கும், மீண்டும் தங்களை அர்ப்பணிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களை TISL கேட்டுக்கொள்கிறது.
Comments (0)
Facebook Comments (0)