காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் இன்று விடுவிக்கப்படும்: ஆளுநர்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள இன்று (09) செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் 'விடியல்' இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதற்மைய, குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளும் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளையும் விடுவிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லாதாகரன் ஊடாக தேசிய கொவிட் -19  செயலணிக்கு கடந்த வெள்ளிக்கிழமை சிபாரிசு செய்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தேசிய கொவிட் செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் இன்று காலை தொலைபேசி ஊடாக கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது  குறித்த 10 கிராம சேவகர் பிரிவுகளையும் உனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறுஆளுநர், இராணுவ தளபதியிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களையும் இன்று விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக இராணுவ தளபதி, கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயினும்இ இப்பிரதேசத்தில் தற்போதும் கொரோனா வைரஸ் பரவுவதற்காக சாத்தியப்படுகள் காணப்படுகின்றன. இதனால் தனிமைப்படுத்தல் விலக்கப்படும் பிரதேசத்திலுள்ள மக்கள் தொடர்ச்சியாக சுகாதார வழிகாட்டல்களை பேணி நடக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

"அத்துடன் ஒரு மீற்றர் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் போன்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக பின்பற்றுமாறும்" அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு, கடந்த டிசம்பர் 31ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் கடந்த ஜனவரி 21ஆம் திகதி எட்டு கிராம சேவகர் பிரிவுகளில் மாத்திரம் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய 10 கிராம சேவகர் பிரிவிகளும் இன்று நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.