ஈரான்: இஸ்லாமிய புரட்சியின் இலக்கு

ஈரான்: இஸ்லாமிய புரட்சியின் இலக்கு

ஈரானும் அதன் ஆதரவாளர்களும் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 11ம் திகதி இன்று இஸ்லாமியப் புரட்சியின் 42வது வருட நிறைவைக் கொண்டாடுகின்றனர். ஈரான் இஸ்லாமியப் புரட்சியைப் பொறுத்த மட்டில் இது மாபெரும் சாதனையாகும்.

ஏனெனில் அதன் ஆரம்பம் தொட்டே முடுக்கி விடப்பட்ட சதிகளை வேறு எந்த நாடும் சமுதாயமும் சமாளித்திருக்காது. புரட்சி வெற்றி பெற்று சில மாதங்களில் பிராந்தியத்தின் மன்னராட்சிகள் கதிகலங்கின.

இஸ்லாமியப் புரட்சியைக் கூண்டோடு கைலாசம் அனுப்ப கங்கணம் கட்டினர். இல்லாவிட்டால் அப்புரட்சி அலை தம் நாட்டு மக்களையும் விழிப்புறச் செய்தால் தமது சிம்மாசனத்துக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தனர்.

முடிவாக உலக வல்லரசுகளதும் அரபு மன்னர்களதும் ஆதரவுடன் சதாம் ஹுஸைன் ஈரான் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்தார். எட்டாண்டுகள் கடந்த பின்னரும் சதாம் ஹுஸைனால் தாம் விரும்பியதை சாதிக்க முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து முழு அளவிலான பொருளாதாரத் தடையை ஈரான் சந்தித்தது. இது வரை மிகக் கடுமையான பொருளதார வர்த்தகத் தடைகளை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் திணித்த போதும் ஈரானிய மக்களின் மன வலிமைக்கு முன் அவை வலுவிழந்தன.

சர்வதேச, பிராந்திய அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அளவே இல்லை. இறுதியாக பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளும் ஈரானும் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை சர்வதேச மரபுகளை துச்சமாக மதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ராம்ப் அரசு அவமதித்து வெளியேறியதோடு ஈரான் மீதான் தடைகளை இரட்டிப்பாக்கியது. அதனையிட்டு ஈரான் கிஞ்சிற்றும் அஞ்சவோ வலுவிழக்கவோ இல்லை.

பிராந்தியத்தில் சொந்தக்காலில் நிற்கும் தனித்துவ மிக்க சக்தியாக அது மென்மேலும் பலம்பெற்று வருகிறது. இஸ்லாமிய நாகரிகம் இஸ்லாமிய நாகரிகத்தின் தோற்றத்துக்குரிய அடிப்படைகளை பெருமானார் (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் கட்டியெழுப்பினார்கள்.

கல்வியறிவுக்கு முன்னுரிமை, ஓரிறைக்கொள்கை, புதிய அரசியல் அமைப்பு, சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை, அடிமையொழிப்பு, வறுமையொழிப்பு, ஒழுக்க விழுமியங்கள், பொருளாதார அறங்கள், குடும்பக் கட்டமைப்பு, இளைஞர் பங்களிப்பு, சர்வதேச உறவுகள், யுத்தமும் சமாதானமும் என இன்னோரன்ன அடிப்படைகளை வகுத்து ஸ்திரமான அடித்தளமொன்றை நபி (ஸல்) கட்டியெழுப்பினார்.

ஹிஜ்ரி இரண்டாம், முன்றாம் நூற்றாண்டுகளில் உலகின் பிரமாண்டமான நாகரிகமாக அது வளர்ந்தோங்கியது. மேற்கு நாகரிகம் தனது போஷாக்கை அதில் இருந்தே பெற்றுக் கொண்டது.

காலவோட்டத்தில் இஸ்லாமிய நாகரிகம் என்பது வரலாற்றுப் புத்தகங்களில் மாத்திரம் காணப்படுகின்ற பழம் பெருமை பேச மட்டும் உதவுகின்ற தலைப்பாக மாறியது என பலர் நினைத்ததில் வியப்பில்லை.

நாகரிகங்களுக்கிடையிலான மோதல் என்ற தலைப்பில் கொழும்பில் பகிரங்க உரையொன்றை நிகழ்த்த வந்திருந்த ஜெர்மன் நாட்டுப் பேராசிரியர் அஹமது வொன் டென்பர் இஸ்லாமிய நாகரிகம் எங்கே இருக்கிறது காட்டுங்கள்| என சவாலாக கேள்வி எழுப்பினார்.

பாரசிக, ரோம சாம்ராஜ்யங்களும் சிந்து சமவெளி, சீன, எகிப்து நாகரிகங்கள் இஸ்லாத்தின் தோற்றத்தின் போது வலுப்பெற்றிருந்தன. குறிப்பாக பாரசிக நாகரிகத்தோடு இஸ்லாம் இரண்டறக் கலந்த போது புதியதொரு நாகரிகப் பிரவாகம் தோற்றம் பெற்றது. அறிவியல் மற்றும் ஆன்மிக வளர்சியின் மையப் புள்ளியாக அகண்ட பாரசீகம் திகழவாயிற்று.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து இஸ்லாமிய நாகரிகம் உலகின் கண் முன்னால் மீண்டும் புனர்ஜென்மம் எடுத்தது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம், அடக்குமுறை, பயங்கரவாதம் போன்ற பல தடைகளை மீறி இன்று இஸ்லாமிய அடையாளத்துடன் கூடிய தனித்துவமான நாகரிகத்தின் இருப்பிடாக அது இமயமாய் எழுந்து நிற்கிறது.

ஆன்மீகத் தலைவரின் நோக்கு புதிய இஸ்லாமிய நாகரிகம் பற்றிய சிந்தனை ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பதாகவே அதன் ஸ்தாபகர் மாமனிதர் இமாம் கொமெய்னி, தற்போதைய தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலீ காமெனெயி, பேரறிஞர்களான ஷஹீத் பெஹெஷதி மற்றும் ஷஹீத் முதஹ்ஹரி போன்றோரின் கருத்துகளில் வேர் விட்டிருந்ததை அவதானிக்கிறோம்.

முஹம்மது(ஸல்) தமது தூதை ஆரம்பித்து பின்னர் மதீனாவில் ஆட்சி அமைப்பதில் இருந்து இஸ்லாமிய நாகரிகம் தோற்றம் பெறுகின்றது என்பது நமது நம்பிக்கை. இந்நாகரிகம் காலவோட்டத்தில் அபிவிருத்தியடைந்து பின்னர் காலாவதியாகிவிட்டதாக யாரும் நம்பியிருந்தால் அது அப்படி மலினமடையவில்லை என்பது மட்டுமன்றி பல்வேறு துறைகளில் அது பல முன்னேளற்றங்களையும் சாதித்து வருகின்றது என்பதை மீண்டும் ஒரு முறை இஸ்லாமியப் புரட்சி உலகுக்கு பறைசாற்றியது.

இது பற்றி விரிவான விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பெருந் தலைவர் இமாம் ஸெய்யித் அலீ காமெனெயி இஸ்லாமிய நாகரிகம் பற்றி வெளியிட்ட சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாமிய போதனைகள் எப்போதும் சில அடிப்படை அம்சங்களை வலியுறுத்துகின்றன. சட்டம், ஒழுங்கு. அரசு. அபிவிருத்தி. வறுமை ஒழிப்பு போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இத்தகைய அம்சங்கள் முறையான வரயறைகளுடன் ஒன்றிணைக்கப்பட்டு ஒழுக்கம், நீதி, சுதந்திரம், அபிவிருத்தி போன்ற அத்தியாவசிய காரணிகள் மூலம் அவற்றை நிலை நிறுத்திப் பாதுகாக்கும் கட்டமைப்பு தான் நாகரிகம் என நாம் விளங்க முடியும்.

இஸ்லாமிய நாகரிகம் பற்றிய ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலீ காமெனெயி மூன்று தளங்களில் இருந்து உரையாடுகின்றார். நபிகளாரின் காலத்து நாகரிக அனுபவம், மேற்கத்திய நாகரிக அனுபவம் மற்றும் ஈரானின் அனுபவம் என்பனவே அவைகாளகும்.

நபிகளாhரின் காலத்தில் தொடங்கிய நாகரிக நகர்வுகளை அவர் இன்றைய ஈரானின் அனுபவங்களோடு தொடர்புபடுத்திப் பேசுகிறார். இஸ்லாமிய நாகரிகத்துக்கான அடித்தளத்தை கட்டியெழுப்புவதில் நபி பெருமானாரின் பங்கு, ஹிஜ்ரி மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாகரிகத்தின் வளர்ச்சி பற்றியும் அதில் இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பாக இமாம்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புரட்சியின் இலக்கு இஸ்லாமிய நாகரிகத்தின் ஆரம்ப கால அனுபவங்களை அலசுகின்ற அன்னார் மேற்கு நாகரிகம் பற்றி விமர்சன நோக்கில் விளக்குகிறார். அது அரசியல் ரீதியான விமர்சனம் அன்றி அறிவியல் ரீதியான நடுநிலையான பகுப்பாய்வு ஆகும். மேற்கு நாகரிகத்திலுள்ள பிரச்சினைகள் மட்டுமன்றி அதில் மனித சமுதாயத்தின் அனுபவம் என்ற வகையில் பயன் பெறத்தக்க சிறப்பம்சங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஈரானின் அனுபவங்களையும் இஸ்லாமிய நாகரிகத்தின் தொடர்ச்சியாகவே விபரிக்கும் ஆன்மீகத் தலைவர், இஸ்லாமிய நாகரிகத்தின் வளர்ச்சிப் பாதையில் உள்ள கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

இஸ்லாமிய நாகரிகம் புத்துயிர் பெற்று தளைத்தோங்குவதற்கான பின்புலத்தையும் சந்தர்ப்பத்தையும் ஈரான் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்கிப் போசிப்பது ஒரு வகையில் ஆட்சியதிகாரம் தொடர்பான அம்சமாகும்.

இஸ்லாமிய சமுதாயம் இந்த அடிப்படையை வலுப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமாகும். ஆகவே. இஸ்லாமிய குடியரசின் கட்டமைப்பின் குறிக்கோளை ஒரே வார்த்தையில் சொல்வதன்றால் இஸ்லாமிய நாகரிகத்தை கட்டியெழுப்புவது ஆகும் என அவர் கூறுகிறார்.

அதன் பிரகாரம் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி புதிய இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்குவதற்காக எடுத்து வைக்கப்பட்ட முதற்படியாகும். முன்னெடுப்புகள் இஸ்லாமியப் புரட்சியின் இலக்குகளைக் கருத்திற் கொண்டு இஸ்லாமியக் குடியரசு அரசானது கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளில் உறுதியான பல முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது.

புதிய இஸ்லாமிய நாகரிகத்தை தோற்றுவிப்பதில் உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளின் சதிகளையும் வல்லரசுகளின் வலிமையான உபாயங்களையும் தகர்த்து அது சாதனை புரிந்து வருகிறது. ஈரானின் சில முன்னெடுப்புகளை நாம் இவ்வாறு சுட்டிக்கட்டலாம்.

கிழக்குக்கோ மேற்குக்கோ சார்பில்லாத அரசில் நிலைப்பாடு, இஸ்லாமிய உலகிலும் பொதுவாக உலகெங்கும் சுதந்திர வேட்கையை தூண்டி பலப்படுத்தல், ஒழுக்க பண்பாட்டு வலுவூட்டல், ஒடுக்கப்பட்டோருக்கான பாதுகாப்பும் ஆதரவும் பலஸ்தீனுக்கு வழங்கும் ஆதரவு, பெண்களின் அந்தஸ்தை உயர்த்தியமை, குடும்ப அமைப்பைப் பலப்படுத்தல், பல்வேறு துறைகளில் பெண்களின் அந்தஸ்து மற்றும் ஈடுபாடு பற்றிய புதிய வரைவிலக்கணம், கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி, பாதுகாப்பு இராணுவ கட்டமைப்பு அபிவிருத்தியும் அனுபவப் பகிர்வும், அணுசக்தி ஆய்வுத்துறை அபிவிருத்தி, நனோ தொழிநுட்பம் மற்றும் மரபணு ஆய்வு, மருத்துவ மற்றும் மருந்தாக்க துறை அபிவிருத்தி, விண்வெளி ஆய்வுத்துறை அபிவிருத்தி, குறிப்பாக மேற்காசியாவில் எதிரெழுச்சி மையங்களுக்கு ஆதரவு.

விளையாட்டு உடற்பயிற்சித் துறைகளில் வியக்கவைக்கும் சாதனைகள், அல் காயிதா மற்றும் ஐ.எஸ் முஸ்லிம் பெயர்தாங்கி பயங்கரவாத சக்திகளை முறியடித்து சுமுகமான நிலையை பிராந்தியத்தில் ஏற்படுத்தல், இஸ்லாமிய போதனைகளின் அடியொட்டிய ஜனநாயக அரசியல் சிந்தனை என்பன சில உதாரணங்கள் மட்டுமே. கொரோனா நோயை இலகுவில் கண்டறியும் கருவி மற்றும் கொரோனா தடுப்பூசி என்பன அண்மைய சாதனைகள்.