மட்டு. – அம்பாறை எல்லை பிரச்சினையை உருவாக்கியவர் ஹரீஸ்: கருணா

மட்டு. – அம்பாறை எல்லை பிரச்சினையை உருவாக்கியவர் ஹரீஸ்: கருணா

-பாரூக் சிஹான், நூருல் ஹுதா உமர்-

மட்டு. - அம்பாறை மாவட்ட எல்லை பிரச்சினை என்பது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மேயராக இருந்த போது வலிந்து தோற்றுவிக்கப்பட்டது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கடந்த வியாழக்கிழமை கல்முனையிலுள்ள அவரது கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர எல்லையை மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாற்று பகுதியில் திட்டமிட்டு பெயர் பலகையை வைத்ததால் தோற்றுவிக்கப்பட்டது.

உண்மையில், துறை நீலாவணை பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டு. - அம்பாறையின் எல்லைக் கல் உள்ளது. இதனை ஒரு பிரச்சினையாக நாங்கள் பார்கவில்லை. சில விசமிகள் திட்டமிட்டு தற்போது ,தனை தூண்டுகிறார்கள்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், தமிழ் கிராமத்திற்குள் கொண்டு எல்லை பலகையை வைத்ததால் நாங்கள் பிடுங்கி எறிய நேரிட்டது. ஏனெனில் அவருக்கு அங்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதால் நடந்த விடயம் அது என்பது மக்களுக்கு தெரியும்.

அம்பாறை மாவட்ட மக்கள் கூட குறித்த உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை. கல்முனை மாநகர சபை அப்போதைய முதல்வரின் அத்துமீறிய செயலாகவே இதனை பார்க்கவே பார்க்க முடியும். இந்த எல்லைகள் யாவும் பிரித்தானியர் காலத்திலிருந்தே வகுக்கப்பட்டிருந்தது" என்றார்.