முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்

முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்

றிப்தி அலி

எதிர்வரும் மார்ச் முதலாம் வாரத்தில் பாரளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாட்டில் நடைபெறும் முதலாவது தேர்தல் என்பதனால் இதுவொரு முக்கியத்துவமிக்க தேர்தலாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் போதியளவான பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே தற்போதைய ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பல்வேறு முக்கிய திட்டங்கள் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற. இந்த திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.

"இந்த திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இதற்கான ஆணையினை பாராளுமன்ற தேர்தலில் வழங்குமாறு"  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  தற்போது பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியினை முன்னெடுக்கும் அரசாங்கத்தினால் அதன் திட்டங்களை இலகுவில் முன்னெடுக்க முடிவதுடன் எந்தவித சிரமுமின்றி பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு தேவையான சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இதுவரை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் மாத்திரமே 1977ஆம் ஆண்டு தேர்தலின் ஊடாக ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை பெற முடிந்தது.

எனினும் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 140 ஆசனங்களை கைப்பற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பாராளுன்ற பலத்தினை பெற்று பல்வேறு செயற்த்திட்டங்களை இலகுவாக முன்னெடுத்தது.

இவ்வாறான நிலையிலேயே மீண்டுமொரு தடவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மையினை பெற முயற்சிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அதுரலிய ரத்ன தேரர் ஆகியோர் சிறுபான்மையினருக்கு எதிரான இரண்டு  பிரேரணைகளை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அதாவது, முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து சட்ட மூலத்தினை நீக்குதல் மற்றும் பாராளுன்ற தேர்தல் முறையில் காணப்படும் விகிதாசாரத்தினை மாற்றியமைத்தல் ஆகியன தொடர்பான சட்ட மூலமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரேரணைகள் தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் இதுவரை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன ஆட்சியொரும் பட்சத்தில் இது போன்ற சட்டமூலங்களை இலகுவாக நிறைவேற்ற முடியும் என்ற அச்ச உணர்வு சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகின்றது.

இவ்வாறான நிலையில் சிறுபான்மையின மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் பாராளுன்ற பிரதிநிதித்துவம் என்பது முக்கிய விடயமாகும். தற்போதைய பாராளுமன்றத்தில் சுமார் 20 முஸ்லிம்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது போன்ற எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்களே கடந்த மூன்று தசாப்த காலமாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.

எனினும் பொதுஜன பெரமுன எதிர்பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பாராளுமன்ற தேர்தலில் கைப்பறினால் முஸ்லிம் பிரநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியொன்று ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட்டது.

இந்த தேர்தலில் அக்கட்சிக்கு வன்னி மாவட்டத்தில் மாத்திரமே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை பெற முடிந்தமை முக்கிய விடயமாகும். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாரியளவினால் முஸ்லிம்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கவில்லை.

எனினும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான பொதுஜன பெரமுன பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய, நாடாளவிய ரீதியில் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பைஸர் முஸ்தபா, களுத்துறை மாவட்டத்தில் மர்ஜான் பளீல், அம்பாறை மாவட்டத்தில் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான குழு, திருகோணமலை மாவட்டத்தில் நஜீப் ஏ. மஜீத், குருநாகல் மாவட்டத்தில் ஏ.ஜே.எம்.முஸம்மில், வன்னி மாவட்டத்தில் காதர் மஸ்தான், புத்தளம் மாவட்டத்தில் எம்.றியாஸ், கண்டி மாவட்டத்தில் பாரிஸ் ஹாஜியார் ஆகியோர் களமிறக்க பொதுஜன பெரமுன தற்போது தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினை தேசியப்பட்டியல் உள்ளீர்க்க பொதுஜன பெரமுன நடவடிக்கையினை மேற்கொள்வதாக தெரிய வருகிறது.

எனினும் பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி இன்று வரை கேள்விக்குரியாகியுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளும் அமைதியாகவே இருக்கின்றன.

கடந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் முக்கிய பங்கு வகித்தன. இந்த ஆட்சிக்கு எதிராக பல்வேறு சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட்டன.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் கேள்விக்குரியாகியுள்ள நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளாமல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக கொண்டு வருவதற்கான போராட்டங்களிலேயே இறங்கியுள்ளன.

இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு அணியாக முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பெயரின் கீழ் களமிறங்க வேண்டும் என்ற விடயம் முஸ்லிம் சமூகத்தில் பரலாவக பேசப்படுகின்றது. எனினும் இந்த ஒற்றுமை தொடர்பில் இதுவரை இந்த இரண்டு கட்சிகளும் எந்தவித முன்னெடுப்பினையும் மேற்கொள்ளவில்லை.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 50க்குள் சுருண்டு போகலாம் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். அக்கட்சியில் காணப்படும் உள்வீட்டு முரண்பாடுகளும் இதனையே தெளிவுபடுத்துகின்றன.

இந்த நிலையிலும் ஐக்கிய தேசிய கட்சியில் தொங்கிச் செல்வதற்கே இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இதன் ஊடாக தங்கள் கட்சிகளின் ஆசனங்களை அதிகரித்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் தானைத் தளபதி எனும் பெயரினை சூட்டிக்கொள்ள குறித்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தற்போது நப்பாசை கொண்டுள்ளனர்.

அது மாத்திரமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் அதிக தேசியப் பட்டியல் ஆசனங்களை பெற முடியும் என்ற நிலைப்பாட்டில் இந்த முஸ்லிம் கட்சி தலைவர்களும் உள்ளனர்.

எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவே தங்களின் தோல்விக்கு காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவிப்பதுடன் அடுத்த தேர்தலில் அக்கட்சிகளை இணைந்துக்கொள்ள கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அக்கட்சியின் உயர் பீடம், சிறுபான்மையினரை அரவணைத்துக்கொண்டே அடுத்த பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் அதிக இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளரான நவீன் திசாநாயக்க தற்போது அடம்பிடிப்பதாக தெரிய வருகின்றது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிலையே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது.

இதனால் தற்போதிருந்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமைத்துவங்கள் இது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளுக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கேட்பதன் மூலம் சுமார் 10க்கு மேற்பட்ட ஆசனங்களை நாடளாவிய ரீதியில் பெற முடியும் என கூறப்படுவதுடன் பாரிய சக்தியாக பாராளுமன்றத்தில் செயற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் 1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்களின் ஆட்சியினை அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் தீர்மானித்து போன்று பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தீர்மானிக்கும் சக்தியாக இந்த முஸ்லிம் கூட்டமைப்பு செயற்படும்.

அதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அமைச்சரவையின் எண்ணிக்கையினை 30க்கு மேல் அதிகரிப்பதற்கு தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றிய மற்றுமொறு கட்சியின் ஆதரவு தேவை.

இவற்றினை கருத்திற்கொண்டு இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரே அணியாக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.

அது மாத்திரமல்லாமல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, தேசிய ஸுரா சபை போன்ற சிவில் அமைப்புகள் இந்த இரண்டு கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் எந்தவொரு முஸ்லிம் சிவில் அமைப்பும் இதுவரை கவனம் செலுத்தாமை கவலையளிக்கின்ற விடயாகும். தமிழ் மற்றும் மலைய கட்சிகள் தங்களுக்கிடையே காணப்படுகின்றன பிளவுகளை மறந்து சமூகத்திற்காக ஒற்றுமைப்பட்டு பாரிய வெற்றியினை ஈட்டியீள்ளது.

அது போன்று எமது இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் இன்னும் தாமதிக்காமல் தங்களின் சுய இலாபங்களை மறந்து சமூகத்தினை முன்னிலைப்படுத்தி ஒரே அணியாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க வேண்டும். இதன் ஊடாக முஸ்லிம் சமூகம் பல்வேறு வெற்றிக்களை எதிர்காலத்தில் அடைய முடியும் என்பதற்கு வரலாற்று முன்னுதாரணங்களே சான்றாகும்.