வேட்பாளர் கட்டுப்பணத் தொகையில் அதிரடித் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

வேட்பாளர் கட்டுப்பணத் தொகையில் அதிரடித் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

அத்தியாவசிமற்ற வகையில் வேட்பாளர்கள், தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்க்கும் வகையில், தேர்தல்களில் போட்டியிடும் போது, வேட்பாளர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  சமர்ப்பிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. இதனடிப்படையில், ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தேர்தல்களில் களமிறங்கும் சுயாதீன வேட்பாளர்கள் மாத்திரம், கட்டுப்பணம் செலுத்த வேண்டுமென்ற நடைமுறையே தற்போது இருக்கின்றது. இந்த நடைமுறையை அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் வேட்பாளர்களும் செலுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பிலும், ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சுயாதீன வேட்பாளர் ஒருவர் 75,000 ரூபாயை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

இந்த நடைமுறையே தற்போதும் அமலிலுள்ளது. அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாபதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரால் 50,000 ரூபாய் கட்டுப்பணம் தற்போது செலுத்தப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கட்டுப்பணத் தொகையை 3 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்குமாறு அமைச்சரவைப் பத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில், தேர்தல்களில் செலுத்தப்படும் கட்டுப்பணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில், தாங்களும் அறிந்து கொண்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்களில் அத்தியாவசியமின்றி வேட்பாளர்கள் களமிறங்குவதைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களின் பெருமளவு பணம் வீணாக செலவிடப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே கட்டுப்பணத் தொகையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.