விசேட தேவையுடைய பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு

விசேட தேவையுடைய பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளானவர்கள் உள்ளடங்கலாக, விசேட தேவையுடைய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவும் வகையில் இலங்கையிலுள்ள ஒரே காப்பிடமான AKASAவுடன் இணைக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் விதமாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை
நிதியத்துடன் இணைந்து, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு இதனை ஆரம்பித்து வைத்துள்ளது.

தற்போதைய கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமாகிவிட்டதால், AKASA போன்ற காப்பிடங்களின் தேவை தெளிவாக உணரப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலைமைகளின் போது, இலங்கையிலுள்ள பெரும்பாலான காப்பிடங்களில் அவர்களுக்குத் தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால், விசேட தேவையுடைய பெண்களின் நிலை மேலும் மோசமடைகின்றது.

அநுராதபுரம் தலாவ பகுதியில் அமைந்துள்ள AKASA காப்பிடமானது, குறிப்பிட்ட தொழில்சார் விடயங்கள் தொடர்பான ஆலோசனை உதவி மற்றும் திறன்விருத்தியை வழங்குகின்றது.

அந்த வகையில், வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பான காப்பிடத்தை தேடுவோரை வலுப்படுத்துவதில், காப்பிடத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பயிற்சி நிலையம் மிகவும் முக்கியமானது. இந்த தேவையினை உணர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப் பிழைத்த மேலும் பலருக்கு மேம்படுத்தப்பட்ட, தரமான சேவைகளை உறுதிசெய்ய அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து, AKASA மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு உதவ ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் முன்வந்துள்ளது.

2030ஆம் ஆண்டு நிகழ்ச்சிநிரலுக்கு முன்னதாக அனைவரும் கருத்திற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் அதன் பங்காளர்களுடன் இணைந்து, பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய தரப்பினருக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து அவர்களை வலுப்படுத்தும்.