கொரோனா ஒழிப்பிற்கு இந்திய இராணுவம் இலங்கை உதவவுள்ளது என வெளியான செய்தியில் உண்மையில்லை: உயர் ஸ்தானிகராலயம்

கொரோனா ஒழிப்பிற்கு இந்திய இராணுவம் இலங்கை உதவவுள்ளது என  வெளியான செய்தியில் உண்மையில்லை: உயர் ஸ்தானிகராலயம்

றிப்தி அலி

கொரோனா வைரஸின் ஒழிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம் இலங்கை வருவுள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று (22) புதன்கிழமை அறிவித்தது.

தெற்காசிய நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக இந்திய இராணுவத்தின் ஒரு குழுவினரை குறித்த நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக பி.டி.ஐ என்று அழைக்கப்படும் இந்திய பிரஸ் ட்ரஸ்ட் நேற்று (21) செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் உதவும் கரங்கள் கொள்கை மற்றும் நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவுகின்ற கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா உதவவுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று 14 பேரைக் கொண்ட இந்திய இராணுவத்தின் குழுவொன்று மாலைதீவிற்கும், 15 பேரைக் கொண்ட இந்திய இராணுவத்தின் குழுவொன்று குவைதிற்கும் கொரோனேவினை ஒழிப்பதற்கு ஏற்கனவே அனுப்பட்டுள்ளதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளரொருவரை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த செய்தியினை அவர் நிராகரித்ததுடன், "இந்தியா இராணுவத்தினை இலங்கைக்கு அனுப்புவதற்கு இது நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை" என்றார்.

"இந்த செய்தி தொடர்பில் நாங்கள் தேடிப் பார்த்த போது அது பொய்யென தெரிய வந்ததாக", குறித்த இராஜதந்திரி மேலும் தெரிவித்தார்.