கொழும்பு வரும் ஐ.என்.எஸ். ரன்விஜய்

கொழும்பு வரும் ஐ.என்.எஸ். ரன்விஜய்

இந்தியாவின் ஐந்தாவது ராஜ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ்.ரன்விஜய் 2021 ஏப்ரல் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கொழும்புக்கான நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

நீர் மூழ்கி எதிர்ப்பு வசதியினைக்கொண்டிருக்கும் இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பலானது சுதேசிய முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சுப்பர் சொனிக் ஏவுகணை வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்புனிதமான 'புதுவருட' கொண்டாட்டங்கள் நடைபெறும் தருணத்தில் இலங்கை மக்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்களுடன் கூட்டொருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகிய செய்தியினையும் குறித்து நிற்பதாக குறித்த இந்திய கடற்படைக் கப்பலின் வருகை அமைகின்றது.

இக்கப்பல் கப்டன் நாராயணன் ஹரிஹரனின் கட்டளையின் கீழியங்கின்றது. இந்த விஜயத்தின் போது  கப்டன் நாராயணன் மேற்கு கடற் பிராந்திய கட்டளை தளபதி சுதர்ஷனவை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் 2021 ஏப்ரல் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரின் நினைவுத் தூபியில் அவர் அஞ்சலி செலுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பாரம்பரிய ரீதியாக பகிர்ந்து வருகின்றன.  பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் பரஸ்பரம் நன்மைதரும் வகையில் இரு கடற்படையினரும் ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.

மிகவும் நெருங்கிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்திசெய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகின்றது.