70:30 என்ற கலப்பு அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த முஸ்தீபு

70:30 என்ற கலப்பு அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த முஸ்தீபு

றிப்தி அலி

புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இந்த மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஜூன் மாத நடுப் பகுதியில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் மீண்டும் அடுத்த அமைச்சரவை விரிவாக கலந்துரையாடப்பட்டமை தீர்மானிக்கப்பட்டுள்ளது

மேலும், 70:30 என்ற கலப்பு அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று அரசாங்க மட்டத்தில் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

இதற்கமைய 70 சதவீதம் தொகுதி அடிப்படையிலும் 30 சதவீதம் விகிதாச்சாரத்தில் அடிப்படையிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான முன்மொழிவொன்றினை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில் தயாரித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, விரைவில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலுக்கு தயாரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கடந்த பெப்ரவரியில் சந்தித்து மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுத்தியமை குறிப்பிடத்தக்கது

13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ்  ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் பதவிக் காலங்கள் கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் நிறைவடைந்தன.

எனினும் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று வரை நடத்தப்படவில்லை. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபை திருத்தச் சட்ட மூலம் கடந்த 2017 செப்டம்பர் 17ஆம் திகதி அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்தச் சட்டத்திற்கு அமைய 437 மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்பது மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்படுவர். இதில் 222 பேர் தொகுதி அடிப்படையிலும் 215 பேர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுவர்.

இதற்கமைய நியமிக்கப்பட்ட மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.

இந்த நிலையில் 2018 ஓகஸ்ட் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை சிறிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டது.

இதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது பாராளுமன்றத்தில் சமூகமளித்திருந்த 139 பேரும் எதிராக வாக்களிக்கத்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கட்ட அறிக்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றினை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து மாகாண சபைத் தேர்தல் கடந்த பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது வந்தது. எனினும் மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா இலங்கையிடம் தொடச்சியாக வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (23)  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் இந்தியா இதனை மீண்டும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, தற்போதுள்ளதை மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே இந்த தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,  மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான தயார் நிலையில் தேர்தல் ஆணைக்குழு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கலப்பு அடிப்படையில் மாகாண சபை தேர்தல் இடபெறுமாயின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் கேள்விக்குரியாக்க மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணப்பட்டு வந்த அதிக முஸ்லிம் உறுப்பினர்களையும் இழக்க நேரிடுவதுடன் மாகாணத்தின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியும் இழக்கப்படும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.