கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு ஆலோசனை

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு ஆலோசனை

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அதிகாரிகளுக்கு இன்று (10) வியாழக்கிழமை ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட்-19 நோயினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையிலான விசேட கூட்டமொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார துறை பிரதானிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த கூட்டத்திலேயே மேற்குறிப்பிட்ட ஆலோசனையினை பிரதமர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் தெரிவித்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு