இந்திய தூதுவராலயத்திற்கு தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் ஊடகவியாலாளர் கைது: ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு

இந்திய தூதுவராலயத்திற்கு தகவல்களை  வழங்கிய குற்றச்சாட்டில் ஊடகவியாலாளர் கைது: ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு

லங்கா ஈ நிவுஸ் செய்தி வலைத்தளத்தில் ஊடகவியலாளராக கடமை புரியும் கீர்த்தி ரத்நாயக என்பவர் இந்திய தூதுவராலயத்திற்கு சில தகவல்களை பெற்றுக்கொடுத்தல் என்ற  குற்றச்சாட்டில் அவரை 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு தெரிவித்தது.

இது தொடர்பில் லங்கா ஈ நிவுஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் குழு எமக்கு அறியத்தந்துள்ளது எனவும் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (23) திங்கட்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும்  பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்,இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியனவே இந்த ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்த ஊடக கூட்டமைப்பினால் "ஊடகவியலாளர்களைக் கைது செய்தல்  மற்றும் விசாரணைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில்!" பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"லங்கா ஈ நிவுஸ் செய்தி வலைத்தளத்தில் ஊடகவியலாளராக கடமை புரியும் கீர்த்தி ரத்நாயக என்பவர் இந்திய தூதுவராலயத்திற்கு சில தகவல்களை பெற்றுக்கொடுத்தல் என்ற  குற்றச்சாட்டில் அவரை 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்கா ஈ நிவுஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் குழு எமக்கு அறியத்தந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளரை பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்துமாறும் அவரது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பாகிய நாம் முதலில் உங்களை வேண்டிக்கொள்கின்றோம்.

அவர் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டு தவிர்ந்த அவர் கடமை புரியும் செய்தி இணையத்தளத்தின் தகவல்கள் மற்றும் மூலாதாரங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், மேலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ஈ நிவுஸ் ஆசிரியர் குழு குறிப்பிடுகின்றது.
 
நீதித்துறை செயல்பாட்டில், ஏதேனும் ஒரு சம்பவம் தொடர்பில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களைத் தவிர அவரிடம் காணப்படும் மற்ற மூலாதாரங்களை  வெளிப்படுத்தாது அதன் ரகசியத்தன்மையைப் பேணுவதானது ஊடகவியலாளர்களின்  பணிசார் பொறுப்பு மற்றும் ஊடகவியல் மரபு என்பதனை இத்தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

ஆகவே, கீர்த்தி ரத்நாயக சம்பவம் தொடர்பான அனைத்து உண்மை தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், சட்ட ஏற்பாட்டு விதிமுறைகளுக்கு  அமைய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தள ஆர்வலரான துஷாரா வன்னி ஆராச்சி  என்பவரின் வீட்டைக் அதிகாலை வேளையில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியதாகக் கூறப்படுகின்றமை, தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர் சிவராஜா தங்கியிருந்த வீட்டிற்குள் சிஐடி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் நுழைய முற்பட்ட சம்பவம், அதே போன்று  மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரிக்கப்பட்டமை போன்ற   சமீபத்திய சம்பவங்களின் பின்னணி தெளிவாக இல்லை என்பதனால்  இந்த சம்பவங்கள்  தொடர்பான தெளிவான தகவல்களை சமூகத்திற்கு தெரியப்படுத்துவது  இன்றியமையாததாக  காணப்படுகின்றது.

ஊடகவியலாளர்களை பயமுறுத்தும் விதத்தில் செயல்படுவதானது அவர்களின் ஊடக சுதந்திரத்தைத் தடுப்பதுடன் மேலும் அவர்களின் ஊடக பணி நடவடிக்கைகளின் செயல்திறனை பாதிக்க வழிவகுக்கும் என்பதனால், பரிந்துரைக்கப்பட்ட  சட்ட ஏற்பாட்டு விதிகளுக்குள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்துமாறும், ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படும் தருணங்களில் கைதுசெய்யப்பட்டதற்கான காரணத்தை சமூக மயமாக்குமாறும் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு என்ற வகையில் உங்களை  கேட்டுக்கொள்கின்றோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.