புர்காவிற்கு தடை விதிக்கப்படும்: நீதி அமைச்சர்

புர்காவிற்கு தடை விதிக்கப்படும்: நீதி அமைச்சர்

பொது இடங்களில் புர்கா எனப்படும் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (25) வியாழக்கிழமை தெரிவித்தார்.  

இது தொடர்பான யோசனை கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"ஒரு சமூகத்தை மாத்திரம் இலக்குவைத்து அல்லாமல் பொதுவாக தேசிய பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக" அவர் கூறினார்.

இதேவேளை, முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக எடுத்து வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

இதனை ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கான படிமுறைகள் இருக்கின்றன. அந்த படிமுறைகளின் அடிப்படையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறினார்.

"குறிப்பாக முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண் ஒருவர் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை 18 ஆக திருத்தப்படவுள்ளது. அத்துடன் விவாக ஆவணத்தில் பெண்களும் கைச்சாதிட அனுமதிக்கப்படுவதுடன் ஆண்கள் அனுபவிக்கின்ற சகல உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க இந்த திருத்தத்தின் ஊடக நடவடிக்கை எடுக்கப்படுவதாக" நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரித்தார்.

நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.