பாக். பிரதமரை சந்தித்து பேச்சு நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் முயற்சி

பாக். பிரதமரை சந்தித்து பேச்சு நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் முயற்சி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை இம்மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சு நடத்துவதற்கான முயற்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான தூதுக் குழுவினர் ஆகியோர் இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமடை தனித் தனியாக இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தறுமாறு இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது சந்திப்பு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி கருத்து தெரிவிக்கையில்,

"இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.

நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்குவாரங்கள் குறித்தும் பிரதி உயர் ஸ்தானிகரிடம் எடுத்துக் கூறினோம்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டலுக்கு இணங்க, உலகத்தின் 190 நாடுகள் கொவிட் - 19 தொற்றினால் மரணிப்பவர்களுடைய உடல்களை அடக்கம் செய்கின்றன.

எனினும், இலங்கையில் மாத்திரம் கடும்போக்கு கொள்கையுடன், இந்த அரசாங்கம் தொடர்ந்தேர்ச்சியாக, எமது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து வருகின்றது.

இது தொடர்பில், எமக்கு நியாயம் பெற்றுத்தர பாக். பிரதமரது விஜயம் உதவ வேண்டும். அத்துடன், இலங்கையிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிவகைகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை, அவர் வலியுறுத்த வேண்டும் என்பதுவும் எமது எதிர்பார்ப்பாகும்" என்றார்.