திகன கலவரம்: உண்மையை கண்டறியும் அறிக்கை வெளயீடு

திகன கலவரம்: உண்மையை கண்டறியும் அறிக்கை வெளயீடு

றிப்தி அலி

கடந்த 2018ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்திலுள்ள திகன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு சரியாக மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்த வன்முறையின் போது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 33 வீடுகள் முற்றாக அழிகக்ப்பட்டதுடன் 256 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டன. மேலும் 163 கடைகளும், 47 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதுடன் இப்பிரதேசங்களிலுள்ள 20 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 100 பேர் ஐ.சி.சி.பீ.ஆர் சட்டத்தின் கீழ்; கைதுசெய்யப்பட்டனர். இந்த வன்முறையின் மூன்று வருட பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பினைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையத்தினால்' (Law & Society Trust) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

'கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பற்றிய உண்மைகளை கண்டறியும் அறிக்கை' எனும் தலைப்பிலான இந்த அறிக்கையினை கொழும்பு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் பர்சானா ஹனீபாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

89 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கைக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி விஜய ஜயதிலக, பேராசிரியர் ஷாமளா குமார், சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம மற்றும் பேராசிரியர் சுமதி சிவமோகன் ஆகியோரை உள்ளிடக்கிய  ஆய்வணி உதவி வழங்கியுள்ளது

இந்த அறிக்கையினை வெளியிடும் நிகழ்வு கடந்த மார்ச் 2ஆம் திகதி இணைய வழி ஊடாக இடம்பெற்றது. ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தினை இங்கு பதிவிறக்கம் செய்ய முடியும்.

திகன, தெல்தெனிய மற்றும் அக்குரணை வன்முறை, அக்குரணை - 8ஆம் கட்டை பற்றிய சம்பவக் கற்கை, நிகழ்வுக்கு முன்னர் நடந்த நிகழ்வுடன் தொடர்புடைய சம்பவங்கள், நிகழ்வுக்குப் பின்னரான குறிப்புக்கள், பாதிக்கப்பட்ட நபர்களினால் குறிப்பிடப்படும் வன்முறைச் சம்பவங்கள், பல்வேறு இனச் சமயக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சமுதாயத் தலைவர்களினால் விபரிக்கப்பட்டவாறான வன்முறைக்கு முன்னரான கண்டியச் சூழமைவு, சட்ட அமுலாக்க உத்தியோகத்தர்களின் வாக்குமூலங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றினை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் இறுதியில் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.  

1. முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைப் பரப்புவது நிறுத்தப்பட வேண்டும். இந்த வெறுப்பு பிரச்சாரத்தினை முறியடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

2. திகன வன்முறைக்கான நட்டஈடு மிகக் குறைவான தொகையுடையதாக இருந்ததுடன் அதில் சில இன்னும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த நட்டஈட்டுத் திட்டங்களை துரிதமாக அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு நட்டஈடு செலுத்தப்படாமையினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் தாம் அரசினால் கைவிடப்பட்டுள்ளதாக உணரக்கூடாது.

3. ஊடக அறிவு மற்றும் இனவாத மொழி மற்றும் செய்திப் பரிமாற்றம் பற்றிய அறிவு மக்களின் மத்தியில் இள வயது முதல் அதிகரிக்கப்பட வேண்டும். சமூக ஊடகப் பாவனை, இனவாத மற்றும் பகைமையினைத் தூண்டும் உள்ளடக்கங்களுக்காகக் கண்காணிக்கப்படுவது முக்கியமானதாகும்.

மேலும் இவ்வாறான செய்திகளின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றிற்கு; எவ்வாறு பதிற் செயற்பாடாற்றுவது என மக்களுக்கு விழிப்பூட்டப்பட வேண்டியது அவசியமாகும் என்பன உட்பட மேலும் பல  பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக நாட்டில் இடம்பெற்று வந்த இனத்துவ யுத்தம் கடந்த 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் பிற்பாடு இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

அவற்றுள் 2014ஆம் ஆண்டு அளுத்கமயிலும், 2017ஆம் ஆண்டு காலி, ஜிந்தோட்டையிலும் 2018ஆம் ஆண்டு  அம்பாறை நகர் மற்றும் கண்டி, திகன ஆகிய பிரதேசங்களிலும்;, 2019ஆம் ஆண்டு குருநாகல், நீர்கொழும்பு, மினுவாங்கொட போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் பாரிய சேதங்களை விளைவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.