ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு மீதான விசாரணை 8ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு மீதான விசாரணை 8ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

கொவிட் - 19 இனால் உயிரிழந்த ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜுன் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதி தலைவர் ஹில்மி அஹமட் உள்ளிட்ட மூவர் கொவிட் - 19 இனால் உயிரிழந்த ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (20) புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. நீதியரசர் தெஹிதனிய தலைமையில் மூவர் அடங்கிய நீதியரசர் குழுவினால் இந்த மனு மீதான விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து றுஸ்தி ஹபீப், எர்மிஷா டிகேல் ஆகியோர் மன்றில் ஆஜராகினர். இதன்போதே, இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜுன் 8ஆம் திகதி வரை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று, இந்த விவகாரம் தொடர்பில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் அவை அனைத்தையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது என சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

சட்டத்தரணி சபீனா மஹ்ரூபினால் இந்த மனு நெறிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.