கொழும்பில் பாகிஸ்தான் பேரீத்தப்பழம் அறிமுகம்

கொழும்பில் பாகிஸ்தான் பேரீத்தப்பழம் அறிமுகம்

பாகிஸ்தான் பேரீத்தப்பழங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு  கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று (08) வியாழக்கிழமை இடம்பெற்றது.

பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் வர்த்தக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இந்த விளம்பர அறிமுக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக், பிரதி உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட், வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளார் அஸ்மா கமல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பன்முகப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் அணுகுமுறையின் மூலம் பேரீத்தப்பழம் போன்ற பாரம்பரியமற்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையை இதன்போது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தெளிவுபடுத்தினார்.

பல ஆரோக்கியமான சுகாதார நன்மைகள் உள்ள  பேரீத்தப்பழத்தினை உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும், இலங்கை இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் உயர் தரமான பேரீத்தப்பழத்தினை நியாயமான  விலையில் பெறுவதற்கான முதன்மை இடமாக பாகிஸ்தானைத் தேர்வு செய்யுமாறும் இந்த நிகழ்வில் உயர் ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் வேண்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளார் அஸ்மா கமல் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது, "பாகிஸ்தானின் பேரீத்தப்பழ  உற்பத்தித்துறை மற்றும் அதன் ஏற்றுமதி திறன் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கியதோடு  பேரீத்தப்பழ உற்பத்தியில் 540,000 வருடாந்திர உற்பத்தியில் பாகிஸ்தான் 6ஆவது இடத்தில் உள்ளது என்றும் உலகில் பேரீத்தப்பழ ஏற்றுமதியில் 8ஆவது இடத்தில் உள்ளது" என்றார்.

பாகிஸ்தானின் வர்த்தக மேம்பாட்டு ஆணையம் மற்றும் கொழும்பில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் ஆகியன பாகிஸ்தானிய பேரீத்தப்பழ ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை அவர் தெளிவுபடுத்தியதோடு, இதன் விளைவாக 2020ஆம் ஆண்டில் இலங்கைக்கான ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேரீத்தப்பழ முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பங்கு பற்றியோர்களுக்கு, உயர்ஸ்தானிகர் பாகிஸ்தான் பேரீத்தப்பழ மாதிரிகளை வழங்கியதோடு, பாகிஸ்தான் பேரீத்தப்பழத்தினால் செய்யப்பட பல்வேறு இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின்  பேரீத்தப்பழத்தின்  சுவை மற்றும் தரத்தினை இந்த நிகழ்வில் பங்குபற்றியவர்கள் பெரிதும் பாராட்டியதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.