கொரோனாவினால் பாதிப்படைந்துள்ள மருதமுனையின் நெசவுக் கைத்தொழில்

கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையினை அடுத்து நெசவுக் கைத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நெசவுக் கைத்தொழிலுக்கு பிரபல்யமான பிரதேசமாக மருதமுனை காணப்படுகின்றது. கடந்த 2004ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது மருதமுனையின் நெசவுத் தொழில் கடுமையாக பாதிப்படைந்தது.

இதன் பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மருதமுனையில் நெசவுக் கைத்தொழில் துணிவோடு எழுந்திருந்தது. நெசவுக் கைத்தொழில் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மருதமுனை பிரதேசத்தில் சுமார் 1,000க்கு மேற்பட்ட கைத்தறிகள் இயங்குகின்றன. இதனால் சுமார் 2,000க்கு மேற்பட்டோருக்கு நேரடியாவும், மறைமுகமாகவும் தொழில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கொரோனாவின் காரணமாக இந்த துறை பாதிப்படைந்தமையினால் பலர் வேலையில்லா பிரச்சினையினை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த வருடம் தமிழ் - சிங்கள புத்தாண்டு, நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள், தீபாவளி பண்டிகை மற்றும் கிறிஸ்மஸ் ஆகியவற்றுக்கு போதியளவான வியாபாரம் இந்த துறைக்கு கிடைக்கவில்லை.

இதனால் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போதாவது நெசவுக் கைத்தொழிலுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.