கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 28 பில்லியன் ரூபா கடன் வழங்க மத்திய வங்கி நடவடிக்கை

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 28 பில்லியன் ரூபா கடன் வழங்க மத்திய வங்கி நடவடிக்கை

கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கென 28 பில்லியன் ரூபா தொகையுடைய கடன்களை நான்கு சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தி வழங்குவதற்கு மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் கடந்த மார்ச் 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் சௌபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.

மத்திய வங்கியானது இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென 27.9 பில்லியன் ரூபா தொகைக்கு ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள் மத்தியில் 14.8 பில்லியன் ரூபாவினை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன.

இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.

மேலும், இரண்டாம் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு நான்கு சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மீள்;கடன் வழங்குவதற்கு வர்த்தக வங்கிகளுக்கு ஒரு சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மேலும் 120 பில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு தற்போது மத்திய வங்கி ஆயத்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.