பள்ளிவாசலில் தொழுத ஒன்பது பேர் கைது

பள்ளிவாசலில் தொழுத ஒன்பது பேர் கைது

திருகோணமலை, ஜின்னா நகர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (10) நண்பகல் தொழுகையில் ஈடுபட்ட 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி, அதான் சொல்வதற்காக முஅத்தின் பள்ளிவாசலில் நுழைந்ததும், அவரை பின்தொடர்ந்து பள்ளிவாசலில் நுழைந்து தொழுகையினை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் கூறினார்.

இவர்களில் ஒருவர் பள்ளிவாசலில் கடமையாற்றும் முஅத்தின் என்ற படியினால் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய எட்டு பேரும் இன்று பி.ப 5.00 மணியளவில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் தத்தமது வீடுகளில் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.