ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை பொருத்தமற்றதும் கண்டனத்திற்குரியதும்: முஷாரப்

ஞானசார தேரரை ஜனாதிபதி  நியமித்தமை பொருத்தமற்றதும்  கண்டனத்திற்குரியதும்: முஷாரப்

விஷேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையானது ஞானசார தேரர் குறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்ற அதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்ற ஒருவரே ஞானசார தேரர் என்பதும் குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டார்.

"அது மாத்திரமன்றி ஞானசார தேரர் இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக தொடர்ச்சியான வெறுப்புப் பிரச்சாரகராக தொழிற்பட்டு வரும் ஒருவர். அவ்வாறான ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான செயலணிக்கு தலைமை தாங்க எந்த விதத்திலும் பொருத்தமற்றவர். ஜனாதிபதியின் இந்த நியமனம் பொருத்தமற்றதும் கண்டனத்திற்கும் உரியது" என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.