அரச ஊடக கற்கை நிறுவனம் விரைவில் நிறுவப்படும்: அமைச்சர் டளஸ்

அரச ஊடக கற்கை நிறுவனம் விரைவில் நிறுவப்படும்: அமைச்சர் டளஸ்

அஷ்ரப் ஏ. சமத்

அரச ஊடக கற்கை நிறுவனமொன்று விரைவில் நிறுவப்படும் என ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இலங்கையில் ஊடக கல்வியை மேற்கொள்வதற்கான அரச நிறுவனமொன்று இல்லை. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊடக தலைவா்களை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றினை அமைத்துள்ளேன். இந்த குழுவின் ஆலோசனையுடனான ஊடகக் கல்வி நிறுவனம் விரைவில் திறக்கப்படும்" என அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த  மாநாடு இன்று (12) சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஊடக அமைச்சா் டலகஸ் அழகப்பெரும,

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தமிழ் தொலைக்காட்சியில் இதுவரை காலமும் தமிழ் மொழி அறவே  தெரியாத ஒருவரே அங்கு பொறுப்பாளராக இருந்து வந்துள்ளாா்.

இதனை அவதானித்த நான் உடனடியாக அங்கு கடமையாற்றும் நிலாா் எம். காசிமை தமிழ் சனலின் பொறுப்பளராக நியமித்துள்ளேன்.

ரூபவாஹினி தொலைக்காட்சியின் இலட்சினையில் மும்மொழிகளிலும் காணப்பட்ட 'ரூபாவாஹினி' என்ற வசனம் தற்போது சிங்களத்தில் மாத்திரம் காணப்படுகின்றது. இது தொடர்பில் ஊடகவியலாளர் றிப்தி அலி என்னிடம் கேள்வி எழுப்பினார்.

அது அவ்வாறில்லை. சிங்கள சனல் சிங்கள மொழியிலும், நேத்ரா சனல் தமிழிலும், 'ஜ' சனல் ஆங்கிலத்திலும் வெவ்வேறாக லோகோவுடன் ஒலிபரப்படும் மொழி இருத்தல் வேண்டும் என பணிப்பாளா் சபை தீர்மானித்திருந்தது.

நான் ஊடக அமைச்சை பாரம் எடுத்து 24 மணித்தியாலயத்துக்குள் என்னிடம் அமைச்சா் அலி சப்றியும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் சேவையை ஏன் மூடிவிட்டாா்கள் என கேள்வி எழுப்பினாா்கள்.  

நான் உடன் இலங்கை ஒலிபரப்பு அதிகாரிகளிடம் இவ்விடயம் பற்றி பேசியபோது கல்வி நிகழ்ச்சிக்காக முஸ்லிம் சேவையை மூடியதாக தெரிவித்தாா்கள். அடுத்த நாளே மீண்டும் இருந்த மாதிரியே முஸ்லிம் சேவையை ஆரம்பியுங்கள், கல்வி ஒலிபரப்புக்காக வேறு ஒரு பிரிகியோன்சினை வழங்குங்கள் என உத்தரவிட்டேன்" என்றார்.