பிரசன்னா மணி எக்சேன்ஜிற்கு வழங்கப்பட்ட நாணய மாற்று அனுமதிப் பத்திரத்தினை நிரந்தரமாக இரத்து

பிரசன்னா மணி எக்சேன்ஜிற்கு வழங்கப்பட்ட நாணய மாற்று அனுமதிப் பத்திரத்தினை நிரந்தரமாக இரத்து

பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட நாணய  மாற்று அனுமதிப் பத்திரத்தினை நிரந்தரமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11ஆவது பிரிவின் 3ஆவது உப பிரிவின் நியதிகளுக்கமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டது.

இதற்கமைய, கோட்டை மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களில் செயற்பட்ட இந்த நிறுவனத்தில் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு தற்காலி இடைநிறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட DFE/RD/0058ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநரொருவராக பிரசன்னா மணி எக்சேன்ஜ்(பிறைவேற்) லிமிடெட், நாணய மாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை எனவும், பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டுடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படும் எனவும் பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.