பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிக்கை

பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிக்கை

மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றன ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்தக் கோரி, பொய்யான தகவல்களை வழங்குவதன் வாயிலாக தனிப்பட்டவர்களிடமிருந்து பண மோசடி செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் கோவைப்படுத்தப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அண்மைக் காலமாக துரித அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டு வருகின்றது.

ஆகையினால், முறையான சரிபார்த்தலின்றி மேற்குறித்த தகவல்களின் அடிப்படையில் இனந்தெரியாத தரப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட வேண்டாம் என்றும் அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு இத்தால் பொதுமக்களை வலியுறுத்துகின்றது.

மேலும், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மோசடிக்காரர்கள் அத்தகைய  கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கும் பொருட்டு உங்களிடமிருந்து பின்வரும் தகவல்களைக் கோரலாம்:

-தனிப்பட்ட அடையாள இலக்கம் (PIN)

-அட்டைகளின் புறப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டவாறான கொடுப்பனவு அட்டைகளை உறுதிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் அட்டை சரிபார்த்தல் பெறுமானங்கள் (CVV)

-கொடுக்கல் வாங்கல்களை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தடவை கடவுச்சொற்கள் (OTP)

-செல்லிட வங்கிச் சேவையில் / இணையவழி வங்கிச் சேவையில் பயன்படுத்தப்படுகின்ற பயனர் அடையாளங்கள், கடவுச் சொற்கள் மற்றும் ஒரு தடவை கடவுச் சொற்கள்

எனவே, அத்தகைய அந்தரங்கத் தகவல்களை எவரேனும் மூன்றாம் தரப்பினரிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்றும் அத்தகைய மோசடிகள் பற்றி விழிப்பாக இருக்குமாறும் மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை மேலும் வலியுறுத்துகின்றது.

அதேபோன்று அவ்வாறான விபரங்களை வழங்குவது உங்களை அல்லது உங்களது குடும்ப உறுப்பினரை அல்லது உங்களது நெருங்கிய நண்பரை நிச்சயமாக நிதியியல் மோசடியொன்றின் மூலம் பாதிப்படையச் செய்யும்.

இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் அல்லது குறுந்தகவல்கள் உங்களுக்குக் கிடைக்குமெனில், தயவுசெய்து 011-2477125 அல்லது 011-2477509 என்ற தொலைபேசி இலக்கங்கங்கள் ஊடாக நிதியியல் உளவறிதல் பிரிவிற்குத் தெரியப்படுத்துங்கள்.