எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தின் மீதான பிரதிபலிப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தின் மீதான பிரதிபலிப்பு

பிரிட்னி மார்ட்டில்

மே 20, 2021 அன்று இலங்கையின் கடற்கரைக்கு அண்மையில் இடம்பெற்ற X-Press Pearl பேரழிவு, பல முனைகளில் எதிரொலித்த ஆழமான விளைவுகளைக் கொண்ட ஒரு பயங்கரமான நிகழ்வாக நிலைத்திருக்கிறது.

இந்த கடல்சார் பேரழிவு சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க விருத்திகளைத் தூண்டியுள்ளதுடன், சம்பவத்தின் தீவிரத்தன்மைக்கு கவனத்தை ஈர்த்ததுடன் உடனடியான நடவடிக்கைக்கான அழுத்தமான தேவையை வலியுறுத்துகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம், சிங்கப்பூரில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தெரிவு செய்தமையின் மூலமாக ஓர் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், இது பேரழிவின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் தீர்மானமாகும்.

துரதிர்ஷ்டவசமான கப்பல் பதிவுசெய்யப்பட்ட நியாயாதிக்க எல்லைக்குள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக, பேரிடரால் ஏற்பட்ட விரிவான சுற்றுச்சூழல் அழிவுகள், பொருளாதார இழப்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் சுகாதார பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு பெறுவதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பேரழிவின் பின்விளைவுகள் தொடர்ச்சியாக வெளிப்படுகையில், பல பரிமாண தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கும் மீட்சிக்கு வழி வகுக்கும் விரிவான நடவடிக்கைகளும் நியாயமான மறுசீரமைப்பும் இன்றியமையாதது என்பது அதிகரித்த முறையில் தெளிவாகின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தின் பல்வேறு துறைகளுக்கு ஏற்பட்ட விளைவுகளை இந்தக் ஆக்கம் ஆராய்வதுடன், பல பரிமாண பாதிப்புகளை நிவர்த்தி செய்து உரிய இழப்பீடு பெற வேண்டிய அவசரநிலை மீது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சுற்றுச்சூழலியல் விளைவுகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவின் விளைவாக கடற் சூழற்தொகுதியில் அபாயகரமான பொருட்கள் மற்றும் மாசுக்கள் வெளிவிடப்பட்டதுடன், இது பரவலான மாசுபாட்டை ஏற்படுத்தியது.

நர்டில்ஸ் எனப்படும் பிளாஸ்டிக் துகள்கள் படிவது குறிப்பிடத்தக்க கரிசனையாக உள்ளது. இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இலங்கையின் கடற்கரைகளில் தேங்கி, கடல் வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பறவைகள், ஆமைகள் மற்றும் பிற கடல் விலங்குகள் பெரும்பாலும் நர்டில்ஸை உணவென தவறாகப் புரிந்துகொள்கின்றதுடன், இதனால் உட்புற காயங்கள், பட்டினி, மரணம் கூட ஏற்படுகிறது.

நுண் பிளாஸ்டிக் கரையோரப் பகுதிகளை மாசுபடுத்துவதுடன், கடற் சூழற்தொகுதி அமைப்பின் நுட்பமான சமநிலையை அச்சுறுத்தும் வகையில் நர்டில் மாசுபாட்டின் அளவு திகைப்பூட்டிக்கொண்டிருக்கிறது.

மேலும், இச்சம்பவம் பிரதான கரையோர வாழ்விடங்களை சீர்குலைத்து சீரழித்துள்ளது. அபாயகரமான இரசாயனங்கள் வெளியிடுகை மற்றும் நீர்நிலைகள் தொடர்ந்து மாசுபடுதல் ஆகியவை சதுப்புநில காடுகள், பவளப்பாறைகள் மற்றும் கடற்புல் படுக்கைகளுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த வாழ்விடங்கள் அத்தியாவசிய இனப்பெருக்க தளங்கள், வளர்ப்பு இடங்கள் மற்றும் ஏராளமான கடல் உயிரினங்களுக்கான தங்குமிடம் ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த வாழ்விடங்களில் ஏற்படும் நச்சுத் தாக்கம், முழு உணவு வலையிலும் அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுடன் இதன் விளைவாக மீன் வளங்களின் குறைவு, உயிர்ப்பல்வகைமையில் இழப்பு மற்றும் கடற்கரையோர சூழற்தொகுதி அமைப்புகளின் ஒட்டுமொத்த சீரழிவினை ஏற்படுத்துகின்றது. இந்த பேரழிவு பல அழிந்து வரும் உயிரினங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை கடல் ஆமைகள், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் உட்பட பல்வேறு கடல் விலங்குகளின் தாயகமாக உள்ளதுடன், அவற்றில் பல ஏற்கனவே பிற சுற்றுச்சூழல் அழுத்தங்களால் பாதிக்கப்படக்கூடியவையாகும். மாசுபடுத்திகளின் வெளியிடுகை மற்றும் அவற்றின் வாழ்விடங்களை மாசுபடுத்துதல் ஆகியவை அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

உதாரணமாக, இலங்கையின் கடற்கரைகளில் கூடு கட்டும் கடல் ஆமைகள் பிளாஸ்டிக் துகள்களின் வருகையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, அவற்றின் இனப்பெருக்க வெற்றி மற்றும் ஒட்டுமொத்த குடித்தொகை வளர்ச்சி தடுக்கப்படும்.

பொருளாதார விளைவுகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தின் பொருளாதார விளைவுகள் வெகுதூரம் சென்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பிரதான வாழ்வாதாரமான இலங்கையின் மீன்பிடித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கரையோர நீர் மாசுபடுவதால், மீன்பிடி நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதுடன், 20,000 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மற்றும் சுமார் 16,000 மீனவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மீன் வளங்களின் சரிவு மற்றும் மாசுபாடு பற்றிய கரிசனைகள் காரணமாக சந்தைகளின் இழப்பு ஆகியவை தொழிற்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிகங்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி பரந்த பொருளாதாரத்தை பாதிக்கிறது. மேலதிகமாக, சூழற்தொகுதி சுற்றுலா தளமாக இலங்கைக்கு இருந்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

அழகிய கடற்கரைகளின் மாசுபாடு மற்றும் எதிர்மறையான ஊடகக் செய்தியாக்கம் ஆகியவை சுற்றுச்சூழல் வீழ்ச்சி தொடர்பில் கவலைப்படக்கூடிய சுற்றுலாப் பயணிகளைத் தடுத்துள்ளன.

சுற்றுச்சூழல் நற்பெயரின் இந்த களங்கம் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருமானத்தில் ஏற்பட்டுள்ள சரிவுடன் நேரடியான பொருளாதார தாக்கங்களைக் கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் வருமான இழப்பு உள்ளூர் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அதிகப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பதற்கான மற்றும் மறுசீரமைப்பதற்கான முயற்சிகளைத் தடுக்கிறது.

சுகாதார பாதிப்புகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவின் போது சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்பட்ட அபாயகரமான இரசாயனங்கள் அருகிலுள்ள சமூகங்களை நச்சுப் பொருட்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாசுபடுத்திகளை உள்ளெடுப்பது சுவாச ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பதுடன், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு சுவாச கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

இந்த நச்சுப் பொருட்களின் வெளிப்பாட்டின் நீண்டகால விளைவுகள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்பதுடன், இது பாதிக்கப்பட்ட நபர்களுக்கான தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றது.

மேலும், அபாயகரமான பொருட்களின் கசிவு காரணமாக கடலோர நீர் மாசுபடுவது குறிப்பிடத்தக்க பொது சுகாதார கவலையை அளிக்கிறது. நீர் ஆதாரங்களில் நச்சுப் பொருட்கள் இருப்பதால் நீர் மூலமாக பரவும் நோய்கள் மற்றும் தொற்றுக்களின் அபாயம் அதிகரிக்கிறது.

குடிநீர், மீன்பிடித்தல் மற்றும் பிற அன்றாட நடவடிக்கைகளுக்கு இந்த நீர் ஆதாரங்களை நம்பியிருக்கும் உள்ளூர் சமூகங்கள் சாத்தியமான சுகாதார அபாயங்களை எதிர்கொள்கின்றன. பாதிக்கப்பட்ட சமூகங்களின் உள ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் இந்த பேரழிவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

வாழ்வாதாரங்களின் அழிவு, நீண்டகால விளைவுகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் இயற்கை வளங்களின் இழப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க உள அழுத்தம், விரக்தி மற்றும் உளவியல் துயரங்களை ஏற்படுத்தியுள்ளன. பேரழிவால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் உணர்வு ரீதியான உளக்காயம், நிதியியல் கஷ்டங்கள் மற்றும் இடம்பெயர்வு உணர்வினை அனுபவிக்கலாம்.

சமீபத்திய முன்னேற்றங்கள்: இழப்பீடு கோருதல்

ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம், சிங்கப்பூரில் சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதற்கான தனது தீர்மானத்தை அண்மையில் அறிவித்தது. பேரழிவால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொள்வது இந்த சட்ட நடவடிக்கையின் நோக்கமாகும்.

சிங்கப்பூரில் ஓர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை எதிர்பாராத திருப்பமென்பதுடன், பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும் வழக்கறிஞருமான டாக்டர் ரவீந்திரநாத் தாபரே, சிங்கப்பூரில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தை நிறுவனங்கள் இதற்கு முன்னர் வெளியிடவில்லை என்றும், இது சமீபத்திய முடிவு மற்றும் விளைவுகளால் உருவானதாகும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவிற்குப் பிறகு, சிங்கப்பூரில் சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடர்வதற்கான தீர்மானம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நடவடிக்கை இச்சம்பவத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை இலங்கை அரசாங்கம் எந்த அளவிற்குப் பார்க்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

சட்ட வழிமுறைகள் மூலமாக இழப்பீடு கோருவதன் மூலம், பேரழிவின் பெருந்தீங்கான விளைவுகளுக்கு பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சட்ட முயற்சியின் சாத்தியமான விளைவுகள் பலதரப்பட்டவையாகும். இது வெற்றியடைந்தால், பாதிக்கப்பட்ட சூழற்தொகுதியை மீட்டெடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மிகவும் தேவையான நிதியியல் ஆதாரங்களை வழங்க முடியும்.

மேலும், இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்ற மற்றும் எதிர்காலத்தில் இதேபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கின்ற ஓர் சக்திவாய்ந்த விடயமாக செயற்படுகிறது. எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவை அடுத்து, இது இலங்கையின் சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு தாங்குதிறனை வலுப்படுத்துவதும் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதும் இன்றியமையாதது என்பது தெளிவாகிறது என்பதற்கான சான்றாகிறது.

இந்த பேரழிவானது அபாயகரமான பொருட்களின் போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்தவும் கடல்சார் நடவடிக்கைகளில் அவசரகால பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தவும் ஒரு விழிப்புணர்வு அழைப்பாக செயற்படுகிறது.

வலுவான கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலையான நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் இதே போன்ற சம்பவங்களின் அபாயங்களைக் குறைக்கும் ஒரு தாங்குதிறனுள்ள எதிர்காலத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் அதிகாரிகள், தொழிற்துறை பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.

பிரிட்னி மார்ட்டில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி மாணவியாவார். நீதி மற்றும் சமத்துவத்திற்கான ஆர்வத்துடன், அவர் அனைத்து வகையான அநீதிகளுக்கும் எதிராக போராடுவதில் உறுதியாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கின்றார்.