சர்வதேச விமான நிலையம்: கிழக்கிற்கும் வேண்டும்

சர்வதேச விமான நிலையம்: கிழக்கிற்கும் வேண்டும்

இன்றைய 21ஆம் நூற்றாண்டில் பொதுமக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாக போக்குவரத்து துறை மாறியுள்ளது. தரை வழி, கடல் வழி மற்றும் ஆகாய வழி ஆகியவற்றின் ஊடாக இந்த போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றது.

நவீன ஊடகங்களின் அறிமுகத்தினை அடுத்து உலகம் சுருண்டுள்ள நிலையில், குறிப்பிட்டதொரு மிகக் குறுகிய நேரத்திற்குள் குறித்த இடமொன்றுக்கு சென்றடையவே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் ஆகாய வழி ஊடாக குறிப்பிட்ட சிறிய நேரத்திற்குள் மற்றுமொரு பிரதேசத்திற்கோ அல்லது நாட்டுக்கோ சென்றடைய முடியும்.

வட மாகாண மக்களின் நீண்ட கால தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினை வளர்க்கும் அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவை கடந்த அக்டோபர் 17ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ். சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

ஏற்கனவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியன உள்ள நிலையில், யாழ். நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பலாலி நகரிலுள்ள இந்த விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக இடம்பிடித்துள்ளது.

இதன் அபிவிருத்தி பணிக்கு 2,250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் பலாலி விமான நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பையும், ஓடு தளத்தையும் புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீட்டர் அளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்;த சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை சிறப்பிக்க இந்திய பிரமுகர்கள் பலர் அலையன்ஸ் எயார் நிறுவனத்துக்கு சொந்தமான யுவுசு72-600 இலக்க விமானத்தில் முதற் தடவையாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.

எயார் இந்தியா நிறுவனத்தின் சக நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமே யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையினை மேற்கொள்கின்றது. இந்த விமான சேவையே அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் முதலாவது சர்வதேச சேவையாகும்.

"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவானது தற்போது வானத்தை தொட்டுள்ளது" என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து, விமான நிலைய திறப்பு விழாவில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அத்துடன் இரு நாடுகளும் பிராந்திய வர்த்தக விமான சேவைகளை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிப்பது குறித்தும் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. 70 பேர் பயணிக்கக் கூடிய அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமானம் வாரத்திற்கு ஏழு விமான சேவைகளை சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

எனினும், மட்டக்கப்பு விமான நிலையம் இதுவரை சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டவில்லை. "இந்த விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தேவையான நடடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக" மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் தலைவரான முத்துகுமார் செல்வராஜா விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.

இதன் மூலம் கிழக்கு வாழ் மக்கள், தங்களின் வீடுகளில் இருந்தவாறு நேரடியாக சென்னைக்கான விமானப் பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் பண வீண் விரயம் தவிர்க்கப்படுவதுடன் நேரமும் சேமிக்கப்படுகின்றது. இதனையே வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர் என அவர் கூறினார். இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான இரு வழி நேரடி விமான சேவை தினந்தோறும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்த வர்த்தகர் முத்துகுமார் செல்வராஜா, குறித்த விமான சேவையின் கட்டணம் அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் அமைய வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு விமான நிலையம்

1958ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தில் 1975ஆம் ஆண்டு வரையில் உள்நாட்டு விமான சேவைகள் நடைபெற்றன. எனினும் நஷ்டம் காரணமாக குறித்த விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்திற்கான சிவில் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் 1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம திகதி ஸ்ரீலங்கா விமானப் படையின் கீழ் இந்த விமான நிலையம் கொண்டுவரப்பட்டதை அடுத்து விமான படையினரால், மேலும் 500 மீற்றராக இந்த விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டது.

விமான படையின் கீழ் விமான நிலையம் இருந்தாலும், பயணிகளின் வசதிக்காக விமானப் படை மற்றும் தனியார் விமான சேவைகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. இதற்கு மேலதிகமாக வாடகை விமானங்கள் தரை இறங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்த நிறைவினை அடுத்து சுமார் 290 மில்லியன் ரூபாய் நிதியில் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் புனரமைக்கப்பட்ட இந்த விமான நிலையம், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டின் முற்பகுதியில் கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் முதலாவது உள்ளூர் விமான நிலையமாக மட்டக்களப்பு விமான நிலையம் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி மாற்றப்பட்டதுடன் 25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமான சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1,488 அடி நீளமும் 150 அடி அகலமுடைய ஓடு பாதையை கொண்ட மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்பிற்காக 1,400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"இவ்வாறு சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக" சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

இதன் ஊடாக வியாபார நடவடிக்கைகள் மற்றம் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிழக்கு மாகாணத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தான் மேற்கொண்ட கோரிக்கையினை அடுத்து கடந்த ஓக்டோபர் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மட்டக்கப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் இந்த விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தியதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

"இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையினை இன்னும் 220 மீற்றர் விஸ்தரிக்க வேண்டியுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகரிகளுக்கு பணித்ததாக" அவர் தெரிவித்தார்.

இதன் பணிகள் விரைவில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதனை அடுத்து மட்டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, "யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டது போன்று மட்டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொள்ள வேண்டும்" என கல்முனை வர்த்தக சங்க தலைவரான கே.எம்.சீத்தீக் தெரிவித்தார்.

இதன் மூலம் கிழக்கு மாகாண மக்களிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினை மேலும் விஸ்தரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். "கிழக்கு மாகணத்திலுள்ள பல வியாபாரிகள் கொழும்புக்குச் சென்று இந்தியாவிற்கான விமான பயணத்தினை மேற்கொள்வதனால் பாரிய செலவு ஏற்படுகின்றது. இது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் தாக்கம் செலுத்துகின்றது.

இதன் மட்;டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக பொருட்களின் விலைகளில் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது" என கல்முனையினைச் சேர்ந்த தொழிலதிபர் சீத்தீக் கூறினார்.

மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகள், வியாபாரிகள், தொழில் முயற்சியாளார்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மக்களும் விரும்புகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியன் ஏலையன்ஸ் விமான நிறுவனம் மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது என்ற பிரதமர் மட்டக்கப்பு விமான நிலையத்தின் ஒடு பாதை 60 ஆசனங்களைக் கொண்ட விமானங்கள் தரையிறங்குவதற்கு போதுமானதாகவுள்ளது. ஆனால் இந்தியன் ஏலையன்ஸ் விமானம் 70 ஆசனங்களைக் கொண்டதாகும். இதனால் ஒடுபாதையினை விஸ்தரிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பான சாத்தியகூறு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எவ்வாறாயினும் பெப்ரவரி மாதமே இந்தியாவிலிருந்து சுற்றுலா பிரயாணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது வழமையாகும். இதற்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்னும் சில தினங்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தினை இந்த நேரடி விமான சேவையின் ஊடாக கட்டியொழுப்ப முடிவதுடன் கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்தியாவிற்கு இடையிலான உறவினை மேலும் அதிகரிக்க முடியும்.

வட மாணத்தினை அபிவிருத்தி செய்வதிலேயே இந்தியா அரசாங்கம் கவனம் செலுத்தாக இனவாதிகளினால் பரப்பப்படும் போலிப் பிரசாரத்தினை மட்;டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பதன் ஊடாக தகர்த்தெரிய முடியும்.

அது மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாண மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் உதவிகள் மற்றும் செயற்திட்டங்களை மேலும் விஸ்தரிக்க முடியும்.
ஏற்கனவே இந்திய விமான சேவைகள் அமைச்சின் தொழிநுட்ப குழுவினர் மட்டக்களப்பு விமான நிலையத்தினை பார்வையிட்டு நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பதற்கான ஆர்வத்தினையும் வெளியிட்டுள்ளனர்.

இதனால் மட்டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு தேவையான அழுத்தங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், வர்த்தக மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியன தனியாகவும், கூட்டாகவும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அரசாங்கங்களிற்கு விடுக்க வேண்டும்.

இதன் ஊடாக கிழக்கு மாகாண மக்களின் நீண்ட கால தேவையான நேரடி சர்வதேச விமான சேவையினை ஆரம்பிக்க முடியும். ஏற்கனவே மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படாமல் நீருபூத்த நெருப்பாக உள்ளது.

இது போன்று மட்;டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையும் இருந்து விடாமல் மிக விரைவாக இதனை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு கிழக்கு மக்களின் நீண்ட நாள் அவ பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

-றிப்தி அலி-