தங்கம் கடத்திய அலி சப்ரி றஹீமை நீக்க மறுக்கும் நயீமுல்லாஹ்

தங்கம் கடத்திய அலி சப்ரி றஹீமை நீக்க மறுக்கும் நயீமுல்லாஹ்

தங்கம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ் மறுப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தற்போது ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என பெயர் மாற்றப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் போட்டியிட்டது.

இக்கட்சியின் ஊடாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பிரான அலி சப்ரி றஹீமை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். எனினும் தங்கம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நீக்கம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்விற்கு கடந்த வாரம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி றஹீமை நீக்குவதற்கான எந்த நடவடிக்கையும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்வினால் இதுவரை எடுக்கப்படவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகின்றது.

அது மாத்திரமல்லாமல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு எம். நயீமுல்லாஹ் பதிலளிக்கமாமல் தவிர்ந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு எதிராக 14 நாட்கள் இடைக்காலத் தடை உத்தரவொன்றினை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (10) பெற்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்வினை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.