கொழும்பில் சவூதி அரேபிய ஸ்தாபக தின நிகழ்வு

கொழும்பில் சவூதி அரேபிய ஸ்தாபக தின நிகழ்வு

சவூதி அரேபியாவின் 'ஸ்தாபக தின' நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (22) கொழும்பு சங்கரில்ல ஹோட்டேலில் இடம்பெற்றது.

இலங்கை குடியரசுக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல்ல குணவர்த்தன, கட்டார், குவைத், பலஸ்தீன், ஓமான் உட்பட அரபு நாட்டுத் தூதுவர்கள், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் என்பது மூன்று சவூதி மாநிலங்கள் தனித் தனியாக நிறுவப்பட்டு, பின்னர் அவை ஒருங்கிணைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது.

இமாம் முஹம்மது பின் ஸுஊத் அவர்கள் முதன் முதலாக, திரய் யாவைத் தலைநகராகக் கொண்ட சவூதி இராச்சியத்தை 1727ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நிறுவினார்.  

அதனைத் தொடர்ந்து, இமாம் துர்கி பின் அப்துல்லா பின் முஹம்மது பின் ஸுஊத் அவர்கள், ரியாதைத் தலைநகராகக் கொண்டு இரண்டாவது சவூதி இராச்சியத்தை, கி.பி. 1824 இல் உருவாக்கினார்கள்.

அடுத்த கட்டமாக, மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் அவர்கள், மூன்றாவது சவூதி அரசை, கி.பி 1902 இல் ரியாதைத் தலைநகராகக் கொண்டு நிறுவியதோடு, இம்முப்பெரும் மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, 1932ஆம் ஆண்டு 'சவூதி அரேபிய இராச்சியம்' என்ற தனி நாட்டை உருவாக்கினார்கள்.

இந்த  ஸ்தாபக தின கொண்டாட்டமானது, சவூதி அரேபியா ஸ்தாபிக்கப்பட்டது முதல் தற்போதைய வளமான சகாப்தத்தை அடையும் வரையான அதன் மரபு மற்றும் ஆழ்ந்த வரலாற்றுப் பின்னணி போன்றவற்றை வெளிக்கொணர்வதில், இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆகியோர் கொண்டுள்ள அக்கறையையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகின்ற சிறந்த சான்றாகும்.

இதன் அடிப்படையில், இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத்  அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 22ஆம் திகதியை அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு அதிகாரபூர்வ விடுமுறையாகவும், தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கும் ஒரு விஷேட அரச ஆணையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: எம்.எஸ். சலீம்