சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக நெளஷாத் மீண்டும் தெரிவு

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக நெளஷாத் மீண்டும் தெரிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். நௌஷாத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தெரிவான இவர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதனால் அக்கட்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் பதவியினையும் அவர் இராஜினாமாச் செய்தார்.

இந்த நிலையில் சம்மாந்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (02) புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது புதிய தவிசாளருக்கான தேர்வு இடம்பெற்றது.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தெரிவுசெய்யப்பட்ட ஏ.எம்.நௌஷாத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவுசெய்யப்பட்ட ஐ.எல்.எம்.மாஹீர் ஆகியோர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான ஏ.எம்.நௌஷாதினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடனான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஆதரித்து 13 வாக்குகளுடன் புதிய தவிசாளராக தெரிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்த போதிலும் ஏழு வாக்குகளை மாத்திரமே அவர் பெற்றுக்கொண்டார்.