ஜனாதிபதி செயலகத்தில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு

ஜனாதிபதி செயலகத்தில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நாட்டுக்காக வேலை” கலாசாரத்தை உருவாக்குவதற்காக 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு அடையாள பூர்வமாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

25 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான இந்த நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது. 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரி இருந்தாலும் 60,000பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இன்று அரச சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை 50,177 ஆகும். இதில்:

38,760 பேர் பெண்களாவர்; கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 31,172 ஆகும்.
உள்வாரி பட்டதாரிகள் 29,156 பேரும், வெளிவாரிப் பட்டதாரிகள் 20,322 பேரும், தேரர்கள் 1,000 பேரும் இந்த நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஏனைய பட்டதாரிகளில் வனிகத்துறை 1,839, முகாமைத்துவம் 7,278, விஞ்ஞானம் 4,494, சுதேச வைத்தியத்துறை 143, இணை சுகாதாரம் 161, கணனி தொழிநுட்பம் 989, பொறியியலாளர் மற்றும் சட்டம் 233 பேர் உள்ளிட்ட கணக்காய்வு டிப்ளோமாதாரிகள் 1,906 பேரும் அடங்குவர்.

நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் தலைமைத்துவம், திறன் மற்றும் எண்ணக்கரு அபிவிருத்தி பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படுவர். ஒரு வருட கால பயிற்சி நிறைவின் பின்னர் கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள், விவசாய சேவை நிலையங்கள், பிரதேச நீர்ப்பாசன அலுவலகங்கள், வனஜீவராசிகள் அலுவலகம், சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள், மருந்தகங்கள், சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கை அலுவலகம் போன்ற கிராமிய பிரிவுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்க்ஷ, ஜீ. எல். பீரிஸ், பந்துல குணவர்தன, ஜனக்க பண்டார தென்னகோன், கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அலகப்பெரும, நாமல் ராஜபக்க்ஷ மற்றும் பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.