கொவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்: அமெரிக்கத் தூதுவர்

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்: அமெரிக்கத் தூதுவர்

கொவிட் 19ற்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்றும், இலங்கை உட்பட உலக நாடுகளில் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் கொவக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (02) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அரசியல் தலைவர் மார்கஸ் காப்பென்டர் மற்றும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக எதிர்காலத்தில் நாட்டின் எரி சக்தித் துறையில் அமெரிக்காவினால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக அந்நாட்டுத் தூதுவர் இங்கு
சுட்டிக்காட்டினார்.

முழு உலகமும் எதிர்கொண்டுள்ள பேரழிவைத் தரும் கொவிட் தொற்றுநோய் மத்தியில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமெரிக்கத் தூதுவர், சபாநாயகரிடம் தெரிவித்தார்.