சீனாவினால் 3 இலட்சம் கொவிட் - 19 தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடை

சீனாவினால் 3 இலட்சம் கொவிட் - 19 தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடை

சீனா அரசாங்கத்தினால் மூன்று இலட்சம் கொவிட் - 19 தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது என கொழும்பிலுள்ள சீன தூதுவராலயம் இன்று (27) புதன்கிழமை அறிவித்தது.

இது தொடர்பில் சீன தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த தடுப்பூசிகள் நன்கொடையாக  வழங்கப்படுகின்றது. இதற்கமைய 'சினோபார்ம்' எனும் தடுப்பூசிகள் இலங்கைக் வழங்கப்படவுள்ளது.

இவை பெப்ரவரி மாதத்தின் நடுப் பகுதியில் கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மற்றும் சீனா ஆகியன வரலாற்று மிக்க நட்பு நாடுகளாகும். இதன் அடிப்படையில் கொவிட் - 19 இற்கு எதிராக போராடும் செயற்பாட்டிற்காகவே இந்த நன்கொடை வழங்கப்படுகின்றது.

சீனாவின் தேசிய மருந்து குழு தனியார் கம்பனியினால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சேர்பியா, பஹ்ரைன், ஜோர்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 26ஆம் திகதி வரை உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்; ஏற்றப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசியினால் பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்டதாக எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை.