வக்ப் சபையின் ரமழான் 2020க்கான பணிப்புரைகள்

வக்ப் சபையின் ரமழான் 2020க்கான பணிப்புரைகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார நிலையில் புனித ரமழான் மாதத்திற்கான பணிப்புரைகளை வக்ப் சபை அறிவித்துள்ளது.

வக்ப் சபை மற்றும் முஸ்லிம சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளரான ஏ.பி.எம். அஷ்ரபினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15ஆம் திபதி புதன்கிழமை இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட மஸ்ஜித் நிருவாகிகளுக்கான இந்த பணிப்புரைகள் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கேற்ப,

1. இமாம் / முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமக்களுக்காகவும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாம் என்றும்,

2. ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும்,

3. இப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும்,

4. பள்ளிவாயிலின் உள்ளோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும்,

5. பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கு இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், கொவிட்- 19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும், வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிருவாகிகளையும் பணிக்கின்றது.