கிராமிய வீதி அபிவிருத்திக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

கிராமிய வீதி அபிவிருத்திக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

நாட்டிலுள்ள கிராமிய வீதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக கிடைக்கப் பெற்றுள்ளது என ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நெடுஞ்சாலை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்  சுபீட்சத்தின்  தொலைநோக்கு கொள்கை திட்டத்திற்க அமைவாக 100,000 கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை உலக வங்கி வரவேற்றுள்ளது.

இந்த திட்டத்தின்  ஊடாக வெற்றிகரமான  பெறுபேறுகள் கிடைத்துள்ளதால், கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும்  வகையில் பாதுகாப்பான மற்றும் காலநிலைகளுக்கு  ஏற்ற வகையில் வீதிகளை  அபிவிருத்தி செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் திட்டமாகவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடி திட்டமாகவும் செயல்படுத்த  உலக வங்கி இந்த தொகையை இலங்கைக்கு வழங்குகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ்  முழு  நாட்டையும்  உள்ளடக்கிய சுமார் 3,000 கி.மீ  நீளமான வீதிகளை  நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு   கிராமப்புறங்களில் விவசாய பயிர் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் பயிர் சேமிப்பு  களஞ்சியங்களையும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார் அமைச்சர் ஜோன்ஸ்டன்.