தன்னை பௌத்த விரோதியாக சித்தரிக்க முயற்சி: றிசாத்

தன்னை பௌத்த விரோதியாக சித்தரிக்க முயற்சி: றிசாத்

றிப்தி அலி

"தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, தன்னை பௌத்த விரோதியாக சித்தரிக்க முயற்சிப்பதாக" அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (11) செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினார்.

இதன் ஊடாக சிங்கள மக்களிடம் அவர் நல்ல பிள்ளை போன்று நடித்து அடுத்த தேர்தலில் வாக்குகளை பெற முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனாலேயே கடந்த திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் தனக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச பல பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக அவர் கூறினார்.

தன்மீது சுமத்திய பொய் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனது சட்டத்தரணி ஊடாக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன்  இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (11) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"அமைச்சர் விமல் வீரவன்சவினால் தனக்க எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அவர் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக சுமத்தி வருகின்றார்.

இதற்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கி அவற்றுக்கான தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளேன். அது போன்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்ட பின்னர், தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவொன்றினை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு நான் ஒரு கடிதமும் எழுதியிருந்தேன்.

நான் ஒரு நிரபராதி என்பதனாலே இந்த கடித்தினை ஜனாதிபதிக்கு எழுதினேன். அமெரிக்காவிலோ வேறு எந்த நாட்டிலோ தனக்கு எந்த வங்கிக் கணக்கும்  இல்லை.
52 நாள் அரசாங்கத்தில் அமெரிக்கவிலுள்ள வங்கிக்கணக்கு ஒன்றில் தனது பெயரில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டதாக  வீரவன்ச பொய் கூறுகின்றார்.

அதேபோன்று, எனது பெயரில் 200க்கு மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த பொய் குற்றச்சாட்டுக்கள் அனைத்தினையும் அவர் நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நான் சவால் விடுக்கின்றேன்.

அத்துடன், தனக்கு எதிராக 65 கோப்புகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்படதாக அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகின்றார். இது தொடர்பில் கருத்து வெளியிட வேண்டியவர்கள் பொலிஸ்மா அதிபர் அல்லது குற்றப்புலனாய்வு பிரிவினரே தவிர அமைச்சர் விமல் வீரவன்சவினால் இந்த விடயம் தொடர்பில் கருத்துக் கூற முடியாது.

கடந்த காலங்களிலும் விமல் வீரவன்ச போன்றவர்கள் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டை என்மீது சுமத்தியதோடு, அவற்றை நான் நிராகரித்ததுள்ளதுடன் எனக்குச் சொந்தமான காணிகள் இருந்தால், அதனை அரசுடமையாக்குமாறு பகிரங்கமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் எடுத்துரைத்துள்ளேன்.

வெறுமனே தேர்தல் வெற்றிக்காக விமல் வீரவன்ச போன்ற ஊழல்வாதிகளும், இனவாதிகளும் காட்போட் வீரர்களாக வலம்வந்து, ஊடகங்கள் முன்னிலையில் வீராப்புப் பேசிக்கொண்டிருக்காமல், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒப்புவிக்க வேண்டும்.

அத்துடன், சதொச நிறுவனத்துக்கான ஜெனரேட்டர் கொள்வனவில் பாரிய ஊழல் நடந்திருப்பதாக இன்னுமொரு குற்றச்சாட்டையும் என் மீது அவர்  முன்வைத்துள்ளார். இதுவும் அப்பட்டமான பொய்யாகும். சதொச நிறுவனத்துக்கான பொருள் கொள்வனவின்போது ரூபா 250 மில்லியனுக்கு அது மேற்பட்டிருந்தால், அமைச்சின் செயலாளர் தலைமையிலான, கேள்விப்பத்திர சபை ஒன்றே அந்த விடயத்தைக் கையாளும்.

அதேபோன்று, நூறு மில்லியன் ரூபாவுக்கு குறைவான பொருள் கொள்வனவின் போது, சதொச நிறுவனத் தலைவர் தலைமையிலான கேள்விப்பத்திர சபை ஒன்று அந்த விவகாரத்தைக் கையாளும். இதற்கு மேலதிகமாக பொருட்களின் தரத்தை பரிசீலிப்பதற்கும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்று பணியில் அமர்த்தப்படும். எனவே, சதொச நிறுவனப் பொருள் கொள்வனவில் எனது தலையீடு ஒருபோதும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

நான் அமைச்சராக செயற்பட்ட போது தனக்கு கீழ் சுமார் 43 திணைக்களங்கள் செயற்பட்டன. அவற்றின் விடயங்களில் ஒருபோதும் நான் கையடித்ததில்லை. இதனால் விமல் வீரவன்சவினால் முன்வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களையும் முற்றாக மறுப்பதுடன், அரசியலுக்காக பொய்யான பிரசாரங்களை இனிமேலும் கட்டவிழ்த்துவிடுவதை விமல் வீரவன்ச உடன் கைவிட வேண்டும்.

அதுமாத்திரமின்றி, வில்பத்துவை அழித்ததாகவும் விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் சுமத்திவரும் குற்றச்சாட்டை நான் ஏற்கனவே பலதடவை மறுத்துள்ளேன்" என்றார்.