திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்க நடவடிக்கை

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்க நடவடிக்கை

கொவிட் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களின் கீழ், எதிர்வரும் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 02ஆம் திகதி) முதல், அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைகளுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதை இலகுபடுத்தும் நோக்குடன், மட்டுப்படுத்தப்பட்ட பணிக் குழாமினரை சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றுநிரூபங்களையும் இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய மக்கள் தொகையில் அதிக சதவீதமானவர்களுக்கு, இது வரையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதில் பெரும்பான்மையான அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமையினால், அரச சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டியுள்ளமையினாலேயே குறித்த அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.