முறைப்பாடுகளை கையாள மத்திய வங்கியினால் துரித அழைப்பு சேவை அறிமுகம்

முறைப்பாடுகளை கையாள மத்திய வங்கியினால் துரித அழைப்பு சேவை அறிமுகம்

பொதுமக்களினால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை கையாள்வதற்காக இலங்கை மத்திய வங்கியானது 1935 எனும் தொலைபேசி துரித அழைப்பு  சேவையொன்றினை அறிமுகப்படுத்த ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடமிருந்து நாளாந்த அடிப்படையில் நிதியியல் விடயங்கள் மீது அதிக எண்ணிக்கையில் விசாரணைகளைப் பெற்றுக்கொள்வதை மேலும் இலகுபடுத்தும் வகையிலேயே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களிடமிருந்தான விசாரணைகளை மும்மொழிகளிலும் வசதிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இச்சேவையானது இலங்கை மத்திய வங்கியின் வேலை நேரங்களில் கிடைக்கக்கூடியதாக உள்ளதுடன் இது அழைப்பாளருக்கு இலவசமான ஓர் அழைப்பல்ல.

இதேவேளை, நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களமானது திருத்தப்பட்டவாறான 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் சேவை வழங்குநர்களுக்கெதிரான முறைப்பாடுகளைக் கையாளும் ஒரு முக்கிய தொடர்புப் புள்ளியாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.

நிதியியல் வாடிக்கையாளர் திணைக்களமானது இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் சேவை வழங்குநர்களுக்கெதிராக முறைப்பாடொன்றினைச் சமர்ப்பிக்க விரும்பும் நிதியியல் வாடிக்கையாளர்களிற்காக முறைப்பாடு சமர்ப்பித்தல் படிவம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது, முறைப்பாடு கையாளல் செயன்முறையினை வினைத்திறனாக ஒழுங்குமுறைப்படுத்துவதுடன் நிதியியல் வாடிக்கையாளர்கள் முறைப்பாடு சமர்ப்பித்தல் படிவத்தினைப் பயன்படுத்தி செம்மையான தகவல்களுடனான தெளிவான மற்றும் சுருக்கமான முறைப்பாட்டினை சமர்ப்பிக்கும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

முறைப்பாடு சமர்ப்பித்தல் படிவத்தின் மென் பிரதி தரவிறக்கம் செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் கிடைக்கும். (https://www.cbsl.gov.lk/sites/default/files/fcrd_complaint_submission_form_t.pdf) நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்திற்கு அதேநேரத்தில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான ஓர் இணையவழிப் படிவம் கிட்டிய எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

நிதியியல் சேவைகளினைப் பயன்படுத்துவோரின் நலன்களினைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றினை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மற்றம் நம்பகத்தன்மையினைப் பாதுகாத்தல் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தின் ஓர் முக்கிய குறிக்கோளாகும்.

பொதுமக்கள் விசாரணைகள்; மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் சேவை வழங்குநர்களிற்கெதிரான முறைப்பாடுகளை அனுப்பி வைப்பதற்காக பின்வரும் தொடர்பு வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

துரித அழைப்பு : 1935 (விசாரணைகள் மட்டும்)

தொலைபேசி : 94 11 247 7966 (விசாரணைகள் மட்டும்)

தொலைநகல் : 94 11 247 7744

மின்னஞ்சல் முகவரி : fcrd@cbsl.lk

தபால் முகவரி : நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம், இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு -01