'சிங்கராஜா உலக பாரம்பரியத்திற்கு பாதிப்பில்லாமல் லங்காகம - நெலுவ வீதி நிர்மாணம்'

'சிங்கராஜா உலக பாரம்பரியத்திற்கு  பாதிப்பில்லாமல் லங்காகம - நெலுவ வீதி நிர்மாணம்'

சிங்கராஜா உலக பாரம்பரியத்துடன் தொடர்புடைய லங்காகமாவிலிருந்து நெலுவவிற்கான வீதி சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த நிர்மாணப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் நிலையிலும் இந்த வீதியை நிர்மாணிப்பதற்கு உந்துசக்தி  வழங்கிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"லங்காகம முதல் நெலுவ  வரையில் வீதி நிர்மாணிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த வீதி நிர்மாணிக்கப்படும் போது அவர்கள் யாரும்  அதனை வரவேற்கவில்லை. இதைப் பார்க்க வரவில்லை.

நெடுஞ்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறை வகையில், லங்காகமவுக்கு  சென்று இந்த வீதி  எப்படி நிர்மாணிக்கப்படுகிறது என்று பார்க்க வருமாறு  நான் பலமுறை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கோரினேன்.

அங்கு செல்வதற்கு வாகனம் மற்றும் மற்ற அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும் கூறினேன்.  ஆனால் எதிர்க்கட்சிகள்  என்ன செய்தன. ஜேவிபி மற்றும் பல்வேறு தனிநபர்களை ஒன்றிணைத்து கொழும்பில் இந்த  வீதி  அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை  தான் செய்தன.  மரங்கள்  வெட்டப்படுகின்றன. இதன்  மூலம் சிங்கராஜா அழிக்கப்படுகிறது என்றார்கள்.

ஆனால் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. இந்த  வீதியை நிர்மாணிப்பதற்காக சிங்கராஜா வனப்பகுதியில் ராஜபக்ஷவினர்  மரங்களை வெட்டி வீழ்த்துவதாக அவர்கள் உலகம் முழுவதற்கும் கூறினார்கள். இந்த வீதியை  அமைக்க நாங்கள் எந்த மரத்தையும் வெட்டவில்லை.

இந்த வீதி  நிர்மாணிப் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியால்  மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.