புதிய அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடனம் ஜனாதிபதியினால் வியாழக்கிழமை முன்வைக்கப்படும்

புதிய அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடனம்  ஜனாதிபதியினால் வியாழக்கிழமை முன்வைக்கப்படும்

எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைப வரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதற்கமைய பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி வைபவரீதியாக முதலாவது அமர்வை ஆரம்பித்துவைக்கவிருப்பதுடன், அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

அன்றையதினம் காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை என்பன இடம்பெறும். இதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.

பாராளுமன்ற அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி வருகைதரும்போது புதிய சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள். அதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றிவைக்கப்படும்.

படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர் புதிய சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால்  ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார்.