பொத்துவில் தள வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாசவினால் உபகரணங்கள் அன்பளிப்பு

பொத்துவில் தள வைத்தியசாலைக்கு சஜித்  பிரேமதாசவினால் உபகரணங்கள் அன்பளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 28ஆவது கட்டமாக இன்று (26) ஞாயிற்றுக்கிழமை முப்பது இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா  (3,025,000/-) பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் பொத்துவில் தள வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
 
இதற்கமைவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பன்னிரெண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா (ரூ1,225,000) பெறுமதி வாய்ந்த High Flow Oxygen Unit இயந்திரமொன்று, ஆறு இலட்சம் ரூபா (ரூ. 600,000) பெறுமதி வாய்ந்த 5 Function ICU Bed இயந்திரமொன்று மற்றும் பன்னிரெண்டு இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த (1,2000,000) Defibrillator இயந்திரமொன்று பொத்துவில் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் மொகமட் றிபாஸிடம் வழங்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலி, அதன் இணை அமைப்பாளர் கயான் தர்ஷன, கல்முனை தொகுதி அமைப்பாளர் றசாக், லாஹுகல பிரதேச சபை உறுப்பினர் பாட்டலி ரோஹண கயந்த லாஹுகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேன உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
 
இதற்கு முன்னர் 27 கட்டங்களில்  806 இலட்சம் (ரூபா 80,609,000)  பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால்  அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.