ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி; ஜம்இய்யதுல் உலமா அதிருப்தி

ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி; ஜம்இய்யதுல் உலமா அதிருப்தி

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்ககப்பட்டமைக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் நேற்று (29) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மேற்குறிப்பிட்ட ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். அண்மைக் காலமாக இத்தலைப்பு பொதுத் தளங்களில் பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது.

இலங்கையில் வாழக்கூடிய சகல பிரஜைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய 'ஒரே நாடு ஒரே மக்கள்' என்ற செயலணியில்  அவரவரது மத விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் பேணி, மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயேவாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மதங்களை மதித்து நடக்கக்கூடிய மதத் தலைவர்கள் பலர் வாழும் நம் நாட்டில் மத நிந்தனைகளில்  முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் கவலையும் அதிருப்தியும் அடைகின்றோம்.

இதன் மூலம் முஸ்லிம்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. இந்நியமனம் சர்வதேச மட்டத்தில் நம் நாட்டுக்கு அகௌரவத்தைக் கொண்டு வரும் ஒரு விடயமாகவும் அமைந்துள்ளது" என்றார்.