சஜித் அவர்களால் பிரதமராக இல்லை எதிர்க்கட்சி தலைவராகவும் வரமுடியாத சூழ்நிலையே இப்போது நாட்டில் உள்ளது : தலைமை வேட்பாளர் ஹுதா உமர்

சஜித் அவர்களால் பிரதமராக இல்லை எதிர்க்கட்சி தலைவராகவும் வரமுடியாத சூழ்நிலையே இப்போது நாட்டில் உள்ளது : தலைமை வேட்பாளர் ஹுதா உமர்

நாசிக் பதுர்தீன்

அம்பாறை மாவட்டத்தில் வாக்கு வேட்டையை இலக்காக கொண்டு  இனவாதிகளுடன் இணைந்து எமது தலைவர்கள் பல புதிய புண்களை கடந்த நல்லாட்ச்சி அரசில் உருவாக்கியுள்ளார்கள்.

அந்த புண்களை நாங்கள் ஆறவைத்து விட்டு முன்னோக்கி ஓட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. அரசை எதிர்த்து பேசிவிட்டு மக்களுக்கு படம்காட்ட அரசின் பிரதானிகளை சந்தித்து பேசுவது அல்லது அறிக்கைகளை விடுவதால் எதுவும் ஆகப்போவதில்லை.

அமையப்போகும் அரசாங்கம் பலமானதாக அமைய போகிறது. சஜித் அவர்களால் பிரதமராக இல்லை எதிர்க்கட்சி தலைவராகவும் வரமுடியாத சூழ்நிலையே இப்போது நாட்டில் உள்ளது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் சார்பில் சுயாதீன அணியாக திகாமடுல்லவில் களமிறங்கியுள்ள சுயட்சை குழு 18 (மான் சின்னம்) தலைமை வேட்பாளர் யூ.எல்.என். ஹுதா தெரிவித்தார்.

பாலமுனை இளைஞர்களுடனான சந்திப்பு நேற்று மாலை பாலமுனை பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு பேசிய அவர்,

"மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கு பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தலைமை ஏற்ற அக்கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் எங்களுக்கு சொந்தமான அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை தரமுடியாமல் கண்டிக்கு கொண்டு சென்றது ஏன் என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா?

அதுதான் இல்லையென்றாலும் முஸ்லிங்களின் முகவெற்றிலையான கல்முனை மத்திய பேருந்து நிலையத்தில் கழிவறை கூட காட்டமுடியாது போனது ஏன்?  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிமைகளை காக்க அல்லது பெற்றுக்கொடுக்க உருவான கட்சி என்று கூறிக்கொள்ளும் அவர்கள் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்புக்கு பிறகு இந்த சமூகத்திற்க்கு பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன ? என்பதை அவர்களிடம் கேட்டுள்ளோமா ? கேட்டாலும் அவர்களிடம் ஒழுங்கான பதிலில்லை.  

அபிவிருத்தியிலும், உரிமை சார் அரசியலிலும் பெயர்சொல்லும் அளவிற்க்கு எதையுமே செய்யாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நாங்கள்  வாக்களித்து அடைந்த நன்மைகள் எதுவுமில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நிராகரித்த அக்கறைப்பற்றும், காத்தன்குடியும் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தொடர்ந்தும் வாக்களித்த அம்பாறை மாவட்டம் தொடர்ந்தும் அரசியல் அனாதையாக இருக்க முடியாது. பழைய புண்களை வைத்து தோண்டித்தோண்டி அரசியல் செய்யும் கலாச்சாரம் இனி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் அம்பாறை மாவட்டத்தில் பல புதிய புண்களை வாக்கு வேட்டைக்காக இனவாதிகளுடன் இணைந்து எமது தலைவர்கள் உருவாக்கியுள்ளார்கள். அந்த புண்களை நாங்கள் ஆறவைத்து விட்டு நாட்டையும் சமூகத்தையும் வளப்படுத்த முன்னோக்கி ஓட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது.

அரசை எதிர்த்து பேசிவிட்டு மக்களுக்கு படம்காட்ட வேண்டும் என்பதற்காக அரசின் பிரதானிகளை சந்தித்து பேசுவது அல்லது கண்டன அறிக்கைகளை விடுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. அமையப்போகும் அரசாங்கம் பலமானதாக அமைய போகிறது என்பது சகலரும் அறிந்த உண்மை. நாட்டின் இன்றைய போக்கை உன்னிப்பாக உற்றுநோக்கினால் சஜித் அவர்களால் பிரதமராக இல்லை எதிர்க்கட்சி தலைவராகவும் வரமுடியாத சூழ்நிலையே இப்போது நாட்டில் உள்ளது.

பிரதமர் மஹிந்த தலைமையிலான அமைச்சரவையில் தலைவர் அதாவுல்லாஹ் அவர்கள் பலம் பொருந்திய அமைச்சராக இருந்து எமக்காக குரல்கொடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்றார்.