'வாகன இறக்குமதி நிறுத்தம், கொவிட் சூழ்நிலைகள் உள்ளிட்டவை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன'

'வாகன இறக்குமதி நிறுத்தம், கொவிட் சூழ்நிலைகள் உள்ளிட்டவை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன'

2019 ஆம் ஆண்டின் இறுதியின் புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரி மறுசீரமைப்புக் காரணமாக ஏறத்தாழ 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டது எனக் கூறுவது நியாயமற்றது.

வாகன இறுக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் கொவிட் சூழலால் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம் என்பனவும் இந்த நிலைமைக்குக் காரணம் என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (08) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ 2019 டிசம்பர் 04 ஆம் திகதி முன்வைத்த முதலாவது அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க வரிக் கொள்கைகள் தொடர்பான இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர,  நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், திறைசேரியின் முன்னாள் செயலாளருமான எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்போது அது தொடர்பில் பின்னணிக் குறிப்பு மற்றும் அறிக்கை காணப்பட வேண்டும் என்றும்,  குறிப்பிட்ட விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளிடமே இதற்கான முழுப் பொறுப்பும் காணப்படுகிறது என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது.

சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் முறையான ஆய்வுக்குப் பின்னரே அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கொவிட் தொற்றுநோய் சூழல் ஏற்படுவதற்கு முன்னர், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிதிக் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாணயச் சபையின் தெளிவான முடிவுகள் அடங்கிய அறிக்கையை பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் யாராவது எழுத்துமூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்களா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மேலும் கேள்வியெழுப்பியிருந்தனர்.

முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர இதற்குப் பதிலளிக்கையில், இவ்வாறான தீர்மானங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும், அதன் பின்னர் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் அதிகாரிகளால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களில் குறைபாடுகள் காணப்படும்போது அப்போது பொறுப்புக்கூறவேண்டி அதிகாரிகள் என்ற ரீதியில் நிபுணர்கள் மற்றும் துறைசார் விற்பனர்களாக அவை குறித்து தமது உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கும் அதுபற்றி தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மீண்டும் வினவினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் அரசியல் செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு உரிய முறையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தவாறாக இருக்கும்போது அவற்றைச் சுட்டிக்காட்டவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அவ்வாறான தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களுக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் நாடு சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதுடன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அரசியல் அதிகாரிகளின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டே கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும் நந்தலால் வீரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான கொள்கைத் தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமும், அப்போதைய அரசியல் அதிகாரிகளிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தபோதும் எவரும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை என இங்கு கலந்துகொண்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உழைக்கும்போது செலுத்தும் வரியை (PAYE Tax)  நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தினால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு வரியைக் குறைத்தமையால் 12.5 வீதமாகக் ஆகக் காணப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 8.7 வீதமாகக் குறைந்தது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அத்துடன், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் தொடர்பாடல்களை அதிகரிப்பதற்கு உரிய நடைமுறைகளை உருவாக்கி நாடு தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது உரிய வகையில் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சர் நளின் பெர்னாந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) நாளக கொடஹேவா, எம்.ஏ.சுமந்திரன், முஜிபுர் ரஹ்மான், சுரேன் ராகவன், காமினி வலேபொட, அனுப பஸ்குவர், விஜித ஹேரத், பிரமித பண்டார தென்னகோன், (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, இசுறு தொடங்கொட மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.