சவூதி அரேபிய வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

 சவூதி அரேபிய வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் பணியில் அஜ்லான் குழுமத்தின் துணைத் தலைவரும், சவூதி அரேபியாவிலுள்ள சவூதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான் தற்போது ஈடுபட்டுள்ளார்

இதன் ஒரு அங்கமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை   நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இலங்கையின் பொருளாதார மீள்தன்மை மற்றும் துறைமுக நகரத்திலும் மற்றும் விருந்தோம்பல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளிலும் காணப்படுகின்ற சாத்தியமான முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அமைச்சர் சப்ரி அவருக்கு இதன்போது விளக்கினார்.

ஷேக் மொஹமட் இலங்கையில் நம்பிக்கைக்குரிய துறைகளில் முதலீடு செய்வதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவையும் கோரினார்.

சவூதி அரேபியாவில் உள்ள சிறந்த மனை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அஜ்லான் குழுமம், குடியிருப்பு, தொழில்துறை, வணிகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு இடங்களை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றது. இந் நிறுவனம் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.