ஹஜ் குழுவின் உறுப்பினர்களினால் ஹஜ் நிதியத்திலுள்ள நிதி துஷ்பிரயோகம்

ஹஜ் குழுவின் உறுப்பினர்களினால் ஹஜ் நிதியத்திலுள்ள நிதி துஷ்பிரயோகம்

றிப்தி அலி

ஓய்வுபெற்ற இராஜதந்திரியான இப்றாஹீம் அன்சார் தலைமையிலான 2023ஆம் ஆண்டுக்கான ஹஜ் குழுவினால் ஹஜ் நிதியத்திலுள்ள நிதி துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற விடயம் எமது புலனாய்வுத் தேடலின் போது தெரியவந்தது.

புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் அனுமதியுடனேயே இந்த நிதித் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின் பிரகாரம், ஹஜ் நிதியத்தில் 14 கோடி 59 இலட்சத்து 29 ஆயிரத்து 8 நூற்று 58 ரூபாவும் 83 சதமும் கடந்த மார்ச் 28ஆம் திகதி மிகுதியாக காணப்பட்டுள்ளது.

இந்த நிதியின் ஊடாகவே இவ்வருடத்திற்கான ஹஜ் குழுவின் உறுப்பினர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூன்று உத்தியோகத்தர்களும் இலங்கை ஹஜ் யாத்திரீகர்களுக்கு தேவையான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

இதில், ஹஜ் குழுவின் நான்கு உறுப்பினர்களுக்கு தலா 2 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான விமான டிக்கட், ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, குறித்த நான்கு பேரினதும் சவூதி அரேபிய விஜயத்திற்கான செலவுகளுக்கு மொத்தமாக 40 இலட்சம் ரூபா பணம் ஹஜ் நிதியத்திலிருந்து கடந்த புதன்கிழமை (14) வழங்கப்பட்டுள்ளது.

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில் குறிப்பிட்ட சிலரின் சொகுசுக்காக முஸ்லிம் சமூகத்தின் பாரிய நிதித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக இப்றாஹீம் அன்சாரும் ஹஜ் குழுவின் தலைவராக அர்ஹம் உவைஸும் செயற்பட்டனர்.

இதன்போது, இலங்கை ஹஜ் யாத்திரீகரின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிக்கச் சென்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு ஹஜ் நிதியத்தின் நிதியினை வழங்க இவர்கள் இருவரும் அனுமதிக்கவில்லை.

இதனால், குறித்த அரச ஊழியர்கள் தங்களின் சொந்த நிதியில் சவூதி அரேபியா சென்று  இலங்கை ஹஜ் யாத்திரீகரின் நலன்புரி நடவடிக்கைகளை கவனித்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இப்றாஹீம் அன்சாரும், அர்ஹம் உவைஸும் முறையே ஹஜ் குழுவின் தலைவராகவும், உறுப்பினராகவும் தற்போது செயற்படுகின்றனர்.

இதனால், இந்த வருடம் ஹஜ் யாத்திரீகரின் நலன்புரி நடவடிக்கைளுக்காக சென்ற ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு ஹஜ் நிதியத்தின் நிதியினை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அனுமதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, ஹஜ் குழுவின் செயற்பாடுகளினால் அதிருப்தியடைந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கூட்டாக இணைந்து புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் எழுத்து மூல முறைப்பாடொன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

அதுமாத்திரமல்லாம்,  ஹஜ் நலன்புரிக்கு திணைக்களத்திலுள்ள பெண் உத்தியோகத்தர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் ஆண் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலும்  குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருட ஹஜ் குழுவிற்கு எதிராக கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நான்கு முகவர் நிறுவனங்களினால் உயர் நீதிமன்ற்ததில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருட கடமைக்கான ஏற்பாடுகளின் போது, ஏற்கனவே 2013ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள ஹஜ் வழிகாட்டல்கள் மீறப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல காரணங்களை முன்வைத்தே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.