கண்டங்களுக்கு இடையேயான பொருளாதார வழித்தடத்தை அமைக்கும ஒப்பந்தத்தில் சவூதி கைச்சாத்து

கண்டங்களுக்கு இடையேயான  பொருளாதார வழித்தடத்தை அமைக்கும  ஒப்பந்தத்தில் சவூதி கைச்சாத்து

காலித் ரிஸ்வான்

18வது G20 உச்சி மாநாடு கடந்த 9ஆம், 10ஆம் திகதிகளில் இந்தியாவின் தலைமையில் புது டில்லியில் “ஒரே குடும்பம், ஒரே உலகம் ஒரே எதிர்காலம்” என்ற மகுடம் தாங்கி நடைபெற்றது.

இதுவே தென்னாசியாவில் நடைபெற்ற முதல் G20 மாநாடாக இருக்கிறது. இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் அடங்கலாக 19 நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

உலகப் பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றத்தைத் தணித்தல், நிலையான வளர்ச்சிகள் மற்றும் பூகோள அரசியல் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதோடு உலகளாவிய பிரச்சினைகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஒத்துழைப்புத் திட்டங்களைத் தீர்ப்பதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.

இம்மாநாட்டின் போது இந்தியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மத்திய கிழக்கு-இந்தியா-ஐரோப்பா இணைப்பு வழித்தடம் (Economic corridor connecting India with the Middle East and Europe), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அதிகாரப்பூர்வமாகத் அம்மாநாட்டின் போது தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டமானது தூய ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கு ரயில் இணைப்புகள், பரிமாற்ற கேபிள்கள் மற்றும் குழாய்களை உருவாக்க இந்த திட்டம் முன்மொழிகிறது.

மேலும், இது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், பைபர் (fiber)  கேபிள்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு மூலம் தரவு பரிமாற்றம் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றுதல், அத்துடன் வர்த்தகம் மற்றும் ரயில் மற்றும் துறைமுகங்கள் மூலம் பொருட்களை நகர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வுச்சி மாநாட்டில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மானும் சவூதி சார்பாக பங்கேற்றார். மேற்கூறப்பட்ட திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அங்கீகரிக்கும் வகையில் தான் கையெழுத்திடுவதாக இளவரசர் உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொண்டார்.

இத்திட்டம் ரயில்வே, துறைமுக இணைப்புகள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஓட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை விருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் அதே நேரம் இதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையேயான வர்த்தம் மேம்படுகிறது.

உலகின் எரிசக்தி விநியோகத்தின் பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனின் ஏற்றுமதி இறக்குமதிக்கான பைப்லைன்கள் மற்றும் எல்லை தாண்டிய தரவு பரிமாற்றத்திற்கான உயர் செயல்திறன் கொண்ட கேபிள்கள் போன்றவற்றின் நிர்மானத்துக்கும் இத்திட்டம் வழிவகுக்கும் என்று பட்டத்து இளவரசர் இம்மாநாட்டின் போது தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உருதுணையாய் அமையும் என்றும் அனைத்து தரப்பினருக்கும் புதிய, உயர்தர வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்றும் பட்டத்து இளவரசர் அவர் கருத்தை  தெரிவித்தார்.

இவ்வாறான தென்னாசிய நாடுகளுடனான மத்தியகிழக்கு மற்றும் ஏனைய நாடுகளின் உறவானது தென்னாசியாவின் வளர்ந்து வரக்கூடிய இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.