இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்: சீனா

இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்: சீனா

கொரோனா நோய்த் தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க தயார் என சீனா இன்று அறிவித்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெயிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (29) புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த அறிவிப்பினை பதில் தூதுவர் மேற்கொண்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

"இலங்கை, சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்து வருகின்றது. அண்மையில் நாம் கொவிட் - 19 அனர்த்தத்திற்கு சீனா முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள்.

இலங்கை தமது நாடு தொடர்பில் பின்பற்றிய அந்த கொள்கைக்கு தனது நாடும் மக்களும் நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக உதவுவது சீனாவின் எதிர்பார்ப்பாகும்.

கொரோனாவுக்கு பிந்திய இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும்" என்றார்.

"இறப்பர் - அரிசி ஒப்பந்தம் காலம் முதல் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை இந்த சந்திப்பில் நினைவுகூர்ந்த" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரான பொருளாதார அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் சீனாவிடமிருந்து குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றன.

கொவிட் - 19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்திற்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நியச் செலாவணி வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பது முக்கிய பிரச்சினையாகும்.

உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆடைக் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. பொருளாதார வீழ்ச்சியை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு இன்னும் காலம் செல்லலாம்.

இலங்கை உற்பத்தி பொருளாதாரத்தின் அடிப்படையிலான புதிய அபிவிருத்தி மாதிரியொன்றை பின்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதனை வெற்றிகொள்வதற்கு நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்கிறோம்.

எமது ஒரே எதிர்பார்ப்பு கடன் அல்லது நிதி உதவியை பெற்றுக்கொள்வதன்று. உற்பத்தியை அதிகரிப்பதற்கு பங்களிக்கும் வகையில் முதலீடுகளை கொண்டுவருவது முக்கிய இலக்காகும். விவசாய உற்பத்திகள் மற்றும் நிர்மாணத் துறை போன்ற பல துறைகளில் வெளிநாட்டு முதலீட்டுக்கான அநேக வாய்ப்புகள் உள்ளன. அதிலிருந்து பயன்பெறுமாறு சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுகின்றேன்" என்றார்.

கொவிட் - 19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து சீனாவின் பதில் தூதுவர் வினவியதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மொத்தமாக நோக்கும் போது நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஓரிரு நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணத்தை விளக்கிய ஜனாதிபதி, அந்த நிலைமைகளை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

"ஜனாதிபதி அவர்களே நாம் உங்களுடன் இருக்கின்றோம்" என பதில் சீன தூதுவர் இந்த சுமுகமான கலந்துரையாடலின் இறுதியில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் துறை தலைவர் லூஓ ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.