தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு, கிழக்கு மக்கள் கைவிடப்படமாட்டர்: பிரதமர்

தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு, கிழக்கு மக்கள் கைவிடப்படமாட்டர்: பிரதமர்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை, குடாவெல்ல பிரதேசத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு - கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி முடியாதென எதிர்க்கட்சியினால் பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அது போன்றே இம்முறை பொதுத் தேர்தலிலும் அந்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

தெற்கு மக்களின் வாக்குளில் அதிகளவாக வெற்றி பெற்ற போதிலும்  வடக்கு - கிழக்கு மக்கள் கைவிடப்பட மாட்டார்கள், அந்த மக்களை வெற்றிக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு - கிழக்கு மக்களை வெற்றிக் கொள்ளும் போது, தெற்கு இளைஞர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் வடக்கு - தெற்கு பேதமின்றி ஒன்றாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவும் அனைத்து சந்தர்ப்பத்தில் எமது அரசாங்கம் செயற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளமை, தொழிற்சாலை மற்றும் திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டமை காரணமாக தற்போதைய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தொழில் இல்லாத பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக விரைவில் உருவாகும் தங்கள் அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.

இதற்காக  தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், அதற்கமைய ஹம்பாந்தோட்டை தேசிய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்காக 450 ஏக்கர் வழங்குவதற்கும், தேசிய டயர் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.