பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம்: பிரதமர்

பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம்: பிரதமர்

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதுக்க பிரதேசத்தில் நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலத்திற்குள் நுழையும் போதே என்னால் மிகவும் மகிழ்ச்சியை உணர முடிகின்றது.

எங்கள் அரசாங்கம் காணப்பட்ட காலப் பகுதியில் நான் பாடசாலை ஒன்றை திறக்க வந்தவுடன் இந்த நிலத்தை பார்க்க வந்தேன். இங்கு மிகப்பெரிய சதுப்பு நிலமே காணப்பட்டது.

நான் அந்த நேரத்திலேயே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பேற்படுத்தி இந்த நிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினேன்.

அவர் அந்த வேலையை செய்தார். இதனால் இன்று நங்கள் இந்த முறையில் மிகவும் சுத்தமாக, தெளிவான அபிவிருத்தியடைந்த இடத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர முடிந்தது.

அன்று நாங்கள் சிறிய கலந்துரையாடலில் ஆரம்பித்த பொதுஜன பெரமுனவின் வருகை இன்று மிகப்பெரிய சக்தியாகியுள்ளது. பிரதேச சபை தேர்தலில் நான்காயிரம் பிரதிநிதிகளை நியமிக்க முடிந்தது.

அன்று 71 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றோம். வடக்கு - கிழக்கை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாங்கள் மிகவும் தெளிவான விசேட வெற்றியை பெற்றோம் என்று கூறினால் சரியாக இருக்கும்.

கடந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை தேர்தலை பிற்போட்டுவிட்டு முடிந்த விடயங்களை செய்தார்கள். நாட்டில் நல்ல நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த நேரிட்டது.

நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம். இந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

கடந்த 5 வருட ஆட்சியில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் முடிந்த விடயங்களை செய்தோம். எனினும் கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருந்த மோதல் காரணமாக மக்களுக்கு எந்த ஒரு விடயமும் கிடைக்கவில்லை.

தற்போது என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவுப்பட்டவர்கள் அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்கவில்லை. வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்காத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவர்கள் சிறிகொத்தவை கைப்பற்றவே வாக்கு கேட்கின்றார்கள். அது நீதிமன்றத்திற்கு சென்றாவது தீர்த்துக் கொள்ள முடியும். நாட்டை அமைக்க எங்களுடன் இணையுமாறு நான் எங்கள் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

தொழில், தொழிற்சாலை, அபிவிருத்தி என்ற துறை நாட்டிற்கு அவசியமாகும். எங்கள் நாடு எங்கள் காலத்தில் மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டது. துறைமுகம், விமான நிலையம் மாத்திரமல்ல, பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் மஹிந்தோதய விஞ்ஞான பீடத்தின் ஊடாக நாங்கள் பாரிய கல்வி வளர்ச்சி ஒன்றை மேற்கொண்டோம்.

பாடசாலைகளை கட்டியெழுப்ப நாங்கள் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். வடக்கு - கிழக்கு உட்பட முழு இலங்கைக்கும் நூற்றுக்கு நூறு வீதம் மின்சாரம் வழங்கினோம்.

தற்போது முழு நாட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மின்சாரம் வழங்கியது போன்றே நாங்கள் நாட்டு வீதிகளுக்கு கார்ப்பெட் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.

தற்போது இலங்கையில் கார்ப்பெட் இல்லாத கிராமம் ஒன்று இல்லை. திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு கூட மண் வீதி ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை என திரைப்பட இயக்குநர்கள் சிலர் கூறினார்கள்.

ஒரு லட்ச கிலோ மீற்றர் நெடுஞ்சாலை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எந்த பிரச்சினை வந்தாலும் இந்த பயணம் தொடர்ந்து செல்ல வேண்டும். சிறிய கால பகுதிக்கு மக்கள் சர்வதேச சூழ்ச்சியில் ஏமாற்றப்பட்டு எங்களை வீட்டிற்கு அனுப்பினார்கள்.

அதில் ஏற்பட்ட நட்டத்தை சரி செய்துக் கொள்ள வேண்டும். நாட்டில் முன்னோக்கி கொண்டு செல்ல வேலை செய்ய கூடியவர்களை நாங்கள் களமிறக்கியுள்ளோம். அவர்களை தெரிவு செய்வதற்கு மக்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள்" என்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்த்தன, முன்னாள் அமைச்சர்களான  காமினி லொக்குகே, கீதாஞ்சன குணவர்தன ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.